திருச்சிராப்பள்ளி, மார்ச் 11- எல்.ஐ.சி ரூ.38,04,610 கோடி மதிப்புள்ள சொத்துகளோடு, ரூ. 34,36,686 கோடி ஆயுள் நிதியோடு, 14 நாடுகளில் கிளைகளை கொண்டுள்ளது. இந்திய நாட்டின் பொருளா தாரத்திற்கு ஆதாரமாக திகழ்கிற, நாட்டின் வளர்ச்சியில் தொடர்ந்து பங்கேற்கிற, உள் கட்டமைப்புக்கு தேவையான நிதியை திரட்டி தருகிற எல்.ஐ.சி பங்கு விற்பனைக்கு எதிராக காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க தஞ்சை கோட்டம் சார்பில் வெள்ளிக்கிழமை திருச்சி எல்ஐசி அலுவலகம் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்க துணைத் தலைவர் ஜோன்ஸ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சங்க இணை செயலாளர் பன்னீர்செல்வம், எல்ஐசி முகவர் சங்க தென்மண்டலக் குழு உறுப்பினர் பொன்.வேலுச்சாமி உள்பட அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க உறுப்பினர்கள் மற்றும் முகவர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அறந்தாங்கி
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எல்.ஐ.சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, காப்பீட்டு கழக ஊழியர் சங்க அறந்தாங்கி கிளை தலைவர் சந்தோஷ் குமார் தலைமை வகித்தார். செயலாளர் வீரப்பன், அருணாச்சலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிபிஎம் மாவட்ட செயலாளர் கவி வர்மன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.