தருமபுரி, ஜூலை 22 - பல லட்சம் விவசாயிகளை பாதிக்கும் யானை வழித்தட விரிவாக்கத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் திங்களன்று நடைபெற்றது.
தமிழ்நாட்டில் 2017 இல், 18 யானை வழித்தடங்கள் இருப்பதாக அறிவித்தனர். 2023 இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 20 யானை வழித்தடங்கள் இருப்பதாக தெரிவித்தனர். தற்போது தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் 42 யானை வழித்தடங்கள் என்று வனத்துறை 2024 ஏப்ரல் 29 அன்று அறிவித்துள்ளது. ஆறு நாட்கள் மட்டுமே விவசாயிகள் கருத்து கூறுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் வனத்துறை அறிவித்துள்ள புதிய யானை வழித்தடங்களில் விவசாய நிலங்கள், குடியிருப்புகள் உள்ளன. யானை வழித்தடங்களை 42 ஆக விரிவுபடுத்தி அறிவித்த வனத்துறை, அங்குள்ள விவசாய நிலங்கள், மனித வாழ்விடங்களை கையகப்படுத்தி அங்குள்ள மக்களை அகற்றிட வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.
தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் வனத்தை ஒட்டியும் சமவெளி பகுதிகளிலும் பல லட்சக்கணக்கான விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றார்கள். இங்கு காட்டுப் பன்றி, மயில், யானை, குரங்கு, காட்டெருமை போன்றவைகளால் பயிர் சேதம் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் இப்படிப்பட்ட சேதாரங்கள் ஆயிரக்கணக்கில் நடைபெற்று வருகிறது. மனித உயிர் சேதமும், பொருட்கள், வீடு, உடைமைகள் சேதமும் ஏற்படுகிறது.
எனவே தமிழ்நாடு அரசு கேரள மாநிலத்தை போன்று பயிர் சேதம், உயிர் சேதம் போன்ற வனவிலங்குகளால் ஏற்படும் இழப்பிற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். அதேபோல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பயிர் சேதத்தினை ஏற்படுத்தும் காட்டுப்பன்றியை வாய் வெடி மருந்து வைத்து கட்டுப்படுத்த வனத்துறையினர், வருவாய்த்துறையினர், விவசாயிகள் கூட்டாக இணைந்து செயல்பட தமிழ்நாடு அரசு உரிய தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். மனித உயிர் சேதத்திற்கு ஏற்படும் இழப்பீடு தொகை ரூபாய் 10 லட்சத்தை நிர்வாக காரணங்களை காட்டி அலைக்கழிக்காமல் காலதாமதம் இன்றி வழங்க வேண்டும். வனத்திற்குள் கால்நடைகளை மேய்ப்பதற்கு ஏற்கனவே நடைமுறையிலிருந்த பட்டி பாஸ், மேச்சல் பாஸ் வழங்கிட வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எம்.குமார் தலைமை ஏற்றார். மாநில பொதுச் செயலாளர் சாமி.நடராஜன் சிறப்புரையாற்றினார். இதில், மாவட்டச் செயலாளர் சோ.அருச்சுணன், மாவட்டப் பொருளாளர் சி.வஞ்சி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நீலகிரி
நீலகிரி மாவட்டம், கூடலூரில் ஆர்டிஓ அலுவலகம் முன்பாக நடைபெற்ற போராட்டத்தில், கூடலூர் மக்களின் 50 ஆண்டு கால பிரச்சனையாக இருக்கக்கூடிய கைவச பூமிகளுக்கு உடனே பட்டா வழங்க வேண்டும். இதற்கான சட்ட திருத்தத்தை மாநில அரசு நிறைவேற்ற வேண்டும்.
மின்சார இணைப்பில்லாமல் தவிக்கும் மக்களுக்கு உடனடியாக மின்சார இணைப்பு வழங்க வேண்டும். மனித-விலங்கு மோதல்களைத் தடுக்க விஞ்ஞான ரீதியான நடவடிக்கைளை மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்களோடு கலந்து ஆலோசித்து அரசு அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
விவசாய சங்கத்தின் மாவட்டத் தலைவர் என்.வாசு தலைமை ஏற்றார். தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநிலத் தலைவர் டில்லிபாபு துவக்கி வைத்தார். இதில், மாவட்டச் செயலாளர் யோகனன், பொருளாளர் குஞ்சம் முகமது, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் வி.எ.பாஸ்கரன் ஆகியோர் உரையாற்றினர்.a