தஞ்சாவூர், ஜூலை 23 - வெளிநாட்டுக்கு கடத்திச் செல்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 14 உலோகச் சிலைகளை, சிலை தடுப்பு பிரிவு காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். ரிஷப தேவர், சிவகாமி அம்மன் மகாவீரர் சிலைகள் உள்ளிட்ட 14 சிலைகளை, வெளிநாட்டில் விற்பனை செய்வதற்காக, பழங்கால சிலைகள் அல்ல என சான்றிதழ் பெறுவதற்காக இந்திய தொல்லியல் துறைக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு ஒரு விண்ணப்பம் வரப்பெற்றது. இது தொடர்பாக தொல்லியல் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், அந்த சிலைகள் பழங்காலச் சிலைகள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அதற்கான சான்று வழங்கப்படவில்லை. இதுகுறித்து சிலை கடத்தல் பிரிவுக்கு வந்த தகவலையடுத்து, தஞ்சை சிவாஜி நகரில் ‘ஆர்ட் வில்லேஜ்’ என்ற நிறுவனத்தை வைத்துள்ள கணபதி என்பவர் இந்தியாவிலோ அல்லது வெளிநாடுகளிலோ சிலைகளை விற்பதற்காக, பழங்கால பொருட்கள் வாங்குபவர்களை தேடி வருவதாக கண்டறியப்பட்டது. மேலும், அங்கு 14 உலோகச் சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு (சிஐடி) தலைமை காவல்துறை இயக்குநர் டாக்டர் கே.ஜெயந்த்முரளி, காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பெ.ரவி ஆகியோர் உத்தரவின்படி, ஏ.டி.எஸ்.பி மலைச்சாமி தலைமையில் 10 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவைப் பெற்று, ‘ஆர்ட் வில்லேஜ்’ நிறுவனத்தில் நடைபெற்ற சோதனையில், ரகசிய இடத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமாள், ரிஷப தேவர், சிவகாமி அம்மன், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், குட்டி நந்தி, கலிங்க கிருஷ்ணன், நடன அம்மன் உள்ளிட்ட 14 சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதற்கான உரிய ஆவணங்கள் ஏதும் ‘ஆர்ட் வில்லேஜ்’ நிறுவனர் கணபதியிடம் இல்லை. எனவே, சிலைகள் எந்த கோயிலில் இருந்து திருடப்பட்டது. சிலைகளின் தொன்மை குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. சர்வதேச சந்தையில் பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த சிலைகளை கைப்பற்றிய குழுவிற்கு, காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர் சைலேந்திரபாபு பாராட்டி வெகுமதி அறிவித்துள்ளார்.