குடவாசல், ஜூன் 5 - முன்னாள் முதல்வர் கலைஞரின் 99 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் பசுமை வாசல் பவுண்டேஷன், குமரி மாவட்டம் தமிழ்நாடு பனை மரம் காக்கும் பாதுகாப்பு இயக்கம், சேலம் மாவட்டம் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா அறக்கட்டளை ஆகிய அமைப்புகள் இணைந்து முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞரின் பிறந்த நாளைச் சிறப்பிக்கும் வகையில் நிகழ்ச்சிகள் நடத்தின. மேலும் தமிழகம் முழுவதும் சிறப்பு மிக்க சமூக சேவகர்கள் மற்றும் சாதனையாளர்களை தேர்வு செய்து விருதுகள் வழங்கினர். இதில் திருவாரூர் மாவட்டம், நன்னிலம் ஒன்றியம் பூந்தோட்டம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் கோ.ஹேமலதாவுக்கு ‘செம்மலர் கலைஞர் விருது’ வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தமிழக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் கையொப்பமிட்ட சான்றிதழ் வழங்கப்பட்டது.