districts

img

நெல் கொள்முதலை தனியாருக்கு விடக் கூடாது: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்      

நெல் கொள்முதலை தனியாருக்கு விடக் கூடாது என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தஞ்சை மாவட்ட 26வது மாநாட்டில் வலியுறுத்துள்ளனர். 

தமிழ்நாடு விவசாயிகள் சங்க, தஞ்சை மாவட்ட 26 ஆவது மாநாடு ஒரத்தநாடு எம்.ஆர்.திருமண மண்டபம், தோழர் தாமரங்கோட்டை ஏ.கோவிந்தசாமி நினைவரங்கில் சனிக்கிழமை(ஜூலை 07) நடைபெற்றது.

மாநாட்டுக்கு மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் எஸ்.கோவிந்தராஜ் கொடியேற்றி வைத்தார். மாவட்ட துணைத் தலைவர் எஸ்.ஞான மாணிக்கம் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். வரவேற்பு குழு தலைவர் என்.சுரேஷ்குமார் வரவேற்றார்.      

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் துவக்க உரையாற்றினார். மாவட்ட பொருளாளர் எம்.பழனிஅய்யா வரவு-செலவு அறிக்கை வாசித்தார். சிபிஎம் மாவட்ட செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.மனோகரன், எஸ்.தமிழ்செல்வி, ஆர்.கலைச்செல்வி, அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் கே.பக்கிரிசாமி, சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால், விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் டி.ரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர். நிறைவாக வரவேற்புக்குழு செயலாளர் டி.மோகனதாஸ் நன்றி கூறினார்.      

நிர்வாகிகள் தேர்வு  

மாநாட்டில், மாவட்டச் செயலாளராக என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவராக பி.செந்தில்குமார், மாவட்டப் பொருளாளராக எம்.பழனி அய்யா மற்றும் 34 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. மேலும், மாநில மாநாட்டு பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர்.      

தீர்மானம்  

உணவுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலையும், விவசாயிகளுக்கு பாதிப்பையும் ஏற்படுத்தும் நிலை உள்ளதால், தமிழக அரசு நெல் கொள்முதலை தனியாருக்கு விடுவதை கைவிட வேண்டும். டெல்லியில் போராடிய விவசாயிகளை ஏமாற்றும் வகையில், வாக்குறிகளை நிறைவேற்றாத ஒன்றிய அரசைக் கண்டித்து வரும் ஜூலை 31ல், ஐக்கிய விவசாயிகள் முன்னணி நடத்தும் சாலை மறியல் போராட்டத்தை தஞ்சாவூர் மாவட்டத்தில் 10 க்கும் மேற்பட்ட இடங்களில் நடத்துவது, தஞ்சை மாவட்டத்தில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் அமைத்து வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும். வேளாண் பொருட்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்து, கட்டுப்படியான விலை வழங்க வேண்டும். ஒரத்தநாடு வேளாண்மை அலுவலகம் மூலம், அனைத்து விவசாயிகளுக்கும் பாரபட்சமின்றி அரசு சலுகைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.      

பயிர் பாசன கடைமடைப் பகுதிகளில், முறையாக தூர்வாரி, நீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒரத்தநாடு ஒன்றியம் ஒக்கநாடு கீழையூர், பருத்திக்கோட்டை, அரசப்பட்டு பகுதியில் இயங்கி வந்த அனைத்து நீரேற்று நிலையங்களையும், முறையாக செயல்படுத்த வேண்டும். ஒரத்தநாட்டில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக துணை மேலாளர் அலுவலகம் அமைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.      

பேரணி  

முன்னதாக, ஒரத்தநாடு பெரியார் சிலையில் இருந்து 500 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியவாறு, தப்பாட்டம் முழங்க, மாநாட்டு மண்டபம் வரை ஊர்வலமாகச் சென்றனர்.