தஞ்சாவூர், ஏப்.7- வெளிநாட்டில் வேலை என்று கூறி வாலிபரிடம் இருந்து ரூ.2.17 லட்சத்தை மோசடி செய்த மர்மநபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதுபோன்ற சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து உடனடியாக 1930 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தி உள்ளனர். தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள பூக்கொல்லையை சேர்ந்த 24 வயது வாலிபர், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்து கொண்டி ருந்தார். அப்போது இவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய மர்ம நபர் வெளிநாட்டில் வேலை வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து இன்டர்வியூ கட்டணம், விசா கட்டணம் என்று பணம் செலுத்த கூறியுள்ளார். இதை உண்மை என்று நம்பி அந்த வாலிபர் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து பல தவணைகளாக அந்த மர்மநபர் கூறிய வங்கி கணக்கில் ரூ.2 லட்சத்து 17 ஆயிரத்து 200 செலுத்தி உள்ளார். ஆனால் வெளிநாடு வேலை குறித்த எந்த ஒரு அறிவிப்பும், இன்டர்வியூ அழைப்பும் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த வாலிபர் தன்னை மர்மநபர் தொடர்பு கொண்ட தொலைபேசி எண்ணை அழைத்து பார்த்துள்ளார். தொடர்ந்து தொடர்பு கொண்டும் பயனில்லை. அப்போது தான் ஏமாற்றப்பட்டதை அந்த வாலிபர் உணர்ந்துள்ளார். இதுகுறித்து அந்த வாலிபர் தஞ்சை சைபர் கிரைம் காவல்துறையில் புகார் செய்தார். அதன்பேரில் ஆய்வாளர் கார்த்திகேயன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.