இந்திய மாணவர் சங்கத்தின் சார்பாக நீட் எதிர்ப்பு பிரச்சார இயக்கம் நடைபெற்றது.
தமிழக மாணவர்களின் நலனுக்கு விரோதமாக இருக்கும் நீட் தேர்வை ரத்து செய்திட வேண்டுமென்று தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளித்திட வேண்டுமென்று தமிழக சட்டமன்றத்தில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக ஆளுநரிடம் வழங்கப்பட்டது.
ஆனால், நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவரிடம் ஒப்படைக்காமல் காலம் தாழ்த்தி வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்களித்தால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று ஆதாரமற்ற கருத்துகளை கூறி நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் திருப்பி அனுப்பினார்.
ஆளுநரின் இத்தகைய செயலுக்கு மாணவர்கள், கல்வியாளர்கள் என பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், இந்திய மாணவர் சங்கத்தினர் தமிழகம் முழுவதும் ஆளு நரை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் ஒரு பகுதியாக சேலம், மாவட்டம் சங்ககிரியில் சனியன்று நீட் எதிர்ப்பு பிரச்சாரமாக மாணவர்களிடம் துண்டறிக்கைகளை வழங்கினர்.
இந்த பிரச்சார இயக்கத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் ஏ.டி. கண்ணன் , சேலம் மாவட்ட தலைவர் எஸ். பவித்ரன், சங்ககிரி தாலுக்கா ஒருங்கிணைப்பாளர் நவநீதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.