சென்னை, மார்ச் 27 - சென்னை மாநகராட்சியில் நகர்ப்புறவேலை வாய்ப்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக திரு.வி.க.நகர், தண்டையார்பேட்டை ஆகிய இரு மண்டலங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. கிராம மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்காக அமல்படுத்தப்பட்ட தேசிய ஊரக வேலை உறுயளிப்புத் திட்டத்தின் கீழ் தினசரி 273 ரூபாய் ஊதியம் வழங்கப்படுகிறது. இதற்கிடையே, நகர்ப்புற ஏழைகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில், தமிழக அரசு நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தை தொடங்க மத்திய அரசிடம் அனுமதி மற்றும் நிதியைக் கோரியது. அதற்கான அனுமதி கிடைக்காத நிலையில், மாநில நிதியில் ரூ.100 கோடி ஒதுக்கி, நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தை செயல்படுத்த முதலமைச்சர் உத்தரவிட்டார். இதையடுத்து, சென்னை மாநகராட்சியில் தற்போது இத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதை செயல்படுத்துவதற்காக முதல்வர் தொகுதி இடம் பெற்றுள்ள திருவிக நகர் மண்டலம், ஏழைகள் அதிகம் வசிக்கும் தண்டையார்பேட்டை மண்டலம் ஆகியவை தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதற்காக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 65ஆவது வட்டத்தில் குறைவான கல்வித்தகுதி உடைய 60க்கும் மேற்பட்டோர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு மழைநீர் வடிகால் தூர் வாரும் பணிகள் வழங்கப்பட்டன. பணியாளர்களுக்கான தினசரி வருகைப் பதிவு புத்தகத்தை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி வழங்கினார். அந்தப்பணிகளை ஆணையர் ஆய்வு செய்தார். இப்பணியாளர்களுக்கு தினசரி 342 ரூபாய் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.