கிருஷ்ணகிரி, ஆக.5-
அஞ்செட்டி மலை கிராமங்களில் ஒரு கிலோ தக்காளி ரூ.250 க்கு விற்பனை செய்யப்படுவதால் மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வட்டம் மற்றும் மலை கிராமங்களில் மானாவாரி பயிர்கள் மட்டுமே விவசாயம் செய்யப்படுகிறது. தட்பவெப்பம், மண் வளம், நீர்ப்பாசன வசதி குறைவால் தக்காளி, காய்கறிகள் இங்கு சாகுபடி செய்யப்படு வதில்லை. ஆனால் பல ஆண்டுகளாக பிற பகுதிகளில் இருந்து கொண்டு வந்து விற்கப் படும் தக்காளியை வாங்கி, பயன்படுத்தி வருகின்றனர்.
ஓசூர்,தேன்கனிக்கோட்டை,சூளகிரி வட்டங்களில் வெயில் மற்றும் நோய் தாக்கம் காரணமாக தக்காளி உற்பத்தி குறைந் துள்ளது. இதனால், அண்டை மாநிலங்க ளான கர்நாடகா, ஆந்திராவில் இருந்து தக்காளி விற்பனைக்கு கொண்டு வந்து சந்தை யில் விற்பனை செய்கின்றனர்.
அங்கிருந்து அஞ்செட்டி மலை கிராமங்களுக்கு வாங்கி வரும் சில்லறை வியாபாரிகள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர். தக்காளி விலை ஆப்பிள் விலையை மிஞ்சி விற்கப்படுகிறது. இரண்டாம் தர தக்காளி 250 ரூபாய்க்கும், மூன்றாம் தரம் ரூபாய் 200-க்கும் விற்பனை செய்கின்றனர். குறைந்தபட்ச வருமானத் திற்கும் வழியில்லாமல் வசித்து வரும் தலித் மற்றும் பழங்குடி மலைவாழ் மக்கள் தக்காளியை வாங்க முடியாமல் வேதனை அடைந்துள்ளனர். எனவே அஞ்செட்டி வட்டத்தில் வேளாண்மை துறை சார்பில், ரேசன் கடைகளில் அரசு குறைந்த விலைக்கு தக்காளி விற்பனைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.