சென்னை,ஆக.13-
கோவை பீளமேட்டை சேர்ந்தவர் ராஜன்பாபு (வயது60). தொழில் அதிபரான இவர் காற்றாலைகள் அமைத்து மின் உற்பத்தி செய்து வருகிறார்.
இவர் தனது தொழில் அபிவிருத்திக்காக ரூ.500 கோடி கடன் பெற சென்னை மேற்கு அண்ணாநகரை சேர்ந்த முகவர் சரவணன் என்பவரை அணுகினார். அதற்கு சரவணன், தனக்கு வெளிநாட்டில் இருந்து ரூ.540 கோடி வந்ததாகவும், அதில் ரூ.500 கோடியை கடனாக தருவதாகவும் கூறினார். இதற்கு கமிசன் தொகையாக ரூ.12.60 கோடியை முன்கூட்டியே தரவேண்டும் என்று கேட்டுள்ளார். அந்த பணத்தை சேத்துப்பட்டில் உள்ள தனியார் வங்கி மேலாளர் பாலாஜியிடம் கொடுத்ததும் ஒரு மணி நேரத்தில் ரூ.500 கோடி உங்கள் வங்கி கணக்குக்கு வந்துவிடும் என்று கூறினார். இதை நம்பிய ராஜன்பாபு சனிக்கிழமையன்று ரூ.12.60 கோடிக்கான காசோலையுடன் வந்தார். சரவணன் கூறிய படி வங்கி மேலாளர் பாலாஜியிடம் காசோலையை கொடுத்தார். ஆனால் சொன்னபடி சரவணன் ரூ.500 கோடி பணத்தை கொடுக்கவில்லை. இதனால் அவர் சரவணனை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். ஆனால் சரவணன் சரியான பதில் இல்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராஜன்பாபு இதுபற்றி நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் தீவிர விசாரணை நடத்தி தனியார் வங்கி மேலாளர் பாலாஜி, சர வணனின் அலுவலகத்தில் வேலை செய்து வந்த ஆழ்வார் திருநகரை சேர்ந்த புவனேஷ் (22), கார் டிரைவர் அரும்பாக்கம் கோவிந்தன்(25) ஆகிய 3 பேரை கைது செய்தனர். இதில் முக்கிய குற்றவாளியான சரவணன் தலை மறை வாகிவிட்டார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது.