சென்னை,ஜூலை 25-
பொது சிவில் சட்டத்தை இந்தியாவில் அமல்படுத்தக் கூடாது என்று தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சபையின் பொதுச்செயலாளர் டாக்டர் வி.எஸ். அன்வர் பாதுஷா மவுலவி விடுத்துள்ள அறிக்கை யில் இந்திய சட்ட ஆணையத்தின் வேண்டுகோளுக்கு இணங்க பொது சிவில் சட்டம் குறித்து விவாதித்து அதை மறுபரிசீலனை செய்வது குறித்த விரிவான பதில் அறிக்கை ஆணையத்திடம் சமர்பித்துள்ளதாக கூறியுள்ளார்.
இந்தியாவில் உள்ள பன்முகப்படுத்தப்பட்ட மனித சமூகங்களின் இணக்கமான வாழ்க்கையை பாதுகாத்தல் மற்றும் செயல்படுத்துவதற்கான அறைகூவல் என்ற தலைப் பில் அறிக்கை தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சமூக நலனையும் சமூக நீதியையும் போற்றுகின்ற இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் மீது பற்று வைத்து இஸ்லாமிய மக்களின் உணர்வுகளை ஆணையம் கருத்தில் கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே பொது சிவில்சட்டம் என்ற முயற்சியை முற்றிலும் சட்ட ஆணையம் கைவிடவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.