சென்னை, நவ. 8 - இடதுசாரிகளே இந்தியாவின் எதிர்காலம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் முழங்கினார். நவம்பர் புரட்சி தின கல்வெட்டு திறப்பு விழா திங்களன்று (நவ. 7) வேளச்சேரி தொகுதிக்குழு அலுவலகத்தில் நடை பெற்றது. ஜி.ராமகிருஷ்ணன் கல்வெட்டை திறந்து வைத்து, கட்சியின் வளர்ச்சிக்கு உழைத்த 30 மூத்த தோழர்களை கவுரவித்தார். அதனைத் தொடர்ந்து பொறுப்பாளர்கள் கட்சி நிதி, தீக்கதிர், மார்க்சிஸ்ட், செம்மலர் சந்தாக்களை வழங்கினர். அதனை பெற்றுக் கொண்டு அவர் பேசுகையில், “ரஷ்ய புரட்சிக்கு பிறகே இந்தியா, சீனா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சி கள் உதயமாகின. மக்களை காலனியாதிக்க திலிருந்து விடுதலை செய்தன” என்றார். “சோவியத் அரசுதான் பொதுசுகாதார திட்டத்தை அறிமுகப்படுத்தியது. கல்வியை அரசே ஏற்று நடத்தியது. அதையே உலக நாடுகள் பின்பற்றி வருகின்றன. மனிதனை மனிதன் சுரண்டுவதற்கு முடிவுகட்ட சோசலிசத்தால் மட்டுமே முடியும்” என்றும் அவர் கூறினார். “உலக பட்டினி குறியீட்டில் 121 நாடுகளை ஆய்வு செய்ததில், இந்தியா 107ஆவது இடத்தில் உள்ளது. இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளைவிட பின்தங்கி உள்ளது. உலகில் வறுமையில் உள்ள மக்களில் 60 விழுக்காட்டினர் இந்தியாவில் உள்ளனர்” என்றும் அவர் தெரிவித்தார். “இந்தியாவில் பாசிசம் இந்துத்துவா வடிவில் வருகிறது. கார்ப்பரேட் இந்துத்துவா கூட்டு சேர்ந்து ஆட்சி செய்கிறது. எனவே, பாஜக ஆட்சியை வீழ்த்த சபதமேற்போம். இடதுசாரிகள் இல்லையேல் இந்தி யாவிற்கு எதிர்காலம் இல்லை” என்றும் ராமகிருஷ்ணன் கூறினார். இந்நிகழ்விற்கு தொகுதிச் செயலாளர் எஸ்.முகமதுரஃபி தலைமை தாங்கினார். தொகுதிக்குழு உறுப்பினர் ஜி.கருணாநிதி வரவேற்றார். தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர்கள் க.பீம்ராவ், கே.வனஜ குமாரி, மாவட்டக் குழு உறுப்பினர் கே.தமிழ் செல்வன் ஆகியோர் பேசினர். தொகுதிக் குழு உறுப்பினர் ஆர்.புருஷோத்தமன் நன்றி கூறினார்.