districts

சென்னை முக்கிய செய்திகள்

தோழி விடுதியை முதலமைச்சர் நாளை திறந்து வைக்கிறார்

தாம்பரம்,ஜன.2- பணியாற்றும் மகளிர் வசதியை கருத்தில் கொண்டு மாநிலம் முழுவதும் தோழி விடுதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சென்னை அடுத்த தாம்பரத்தில்  ரூ.18 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள ‘தோழி’ விடுதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 4-ந்தேதி திறந்து வைக்க உள்ளார்.  தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்  மூலம் இயங்கி வரும் ‘தோழி’ என்ற பெயரிலான பணிபுரி யும் மகளிருக்கு விடுதி தமிழ்நாட்டின் 9 இடங்களில் செயல் பட்டு வருகிறது. தாம்பரத்தில் திறந்து வைக்க உள்ளது 10-வது விடுதியாகும்.

பைக் மீது கார் மோதியதில் காதலர்கள் பலி

அம்பத்தூர், ஜன. 2- புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பூந்தமல்லி அருகே இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில் காதலர்கள் திங்கள்கிழமை உயிரிழந்தனர். மயிலாடுதுறை, சீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ்(26). தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம், பண்டாரபுரத்தைச் சேர்ந்தவர் அபிநயா சவுந்தர்யா(25). பொறியியல் பட்டப்படிப்பு முடித்த இவர்கள் இருவரும் பூந்தமல்லி அருகே கரையான்சாவடி, பங்கிகாம் தெருவில்  உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடுகளில் தனித்தனியாக வசித்து வந்தனர். பிரகாஷ் தனியார் வங்கியிலும், அபிநயா சவுந்தர்யா தனியார் நிறுவனத்திலும் வேலை செய்து வந்தனர். கடந்த 5 ஆண்டுகளாக இவர்கள் ஒருவரை  ஒருவர் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திங்கட்கிழமை இவர்கள் இருவரும் ஆங்கில புத்தாண்டை கொண்டாடுவதற்காக  பூந்தமல்லியில் இருந்து செம்பரம்பாக்கம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். பூந்தமல்லி - பெங்களூரு நெடுஞ்சாலை, பாப்பான்சத்தி ரம் பகுதியில் வந்த போது, இரு சக்கர வாகனத்தின் மீது பின்னால் வேகமாக வந்த கார் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் அபிநயா சவுந்தர்யா  படுகாயங்களுடன்  சம்பவ இடத்திலேயே  உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி போக்கு வரத்து புலனாய்வு காவல் துறையினர் அபிநயா சடலத்தை  கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காவல் துறையினர் படுகாயம் அடைந்த பிரகாசை  மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனையில் வரும் வழியிலேயே பிரகாஷ் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.  புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, விபத்தை ஏற்படுத்திய ராணிப் பேட்டை, வேப்பூர் பகுதியைச் சேர்ந்த கார் ஓட்டுநர் முகம்மது அர்ஷத்(27) என்பவரை கைது செய்தனர்.

ஜிப்மர் இயக்குநர் பதவி நீட்டிப்பை கைவிடுக: பாதுகாப்புக் குழு வலியுறுத்தல்

புதுச்சேரி,ஜன.2- ஜிப்மர் இயக்குநர் பதவி காலம் நீட்டிப்பை உடனடியாக கைவிட வேண்டும் என்று ஜிப்மர் பாது காப்புக் குழு தலைவர் தா. முருகன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:- ஜிப்மர் நிறுவனம் கடந்த 2008 ஆண்டு ஜூலை 14 அன்று தன்னாட்சி நிறுவனமாக தரம் உயர்த்தப் பட்டது. அதன்பிறகு, நாடு முழுமைக்கும் விண்ணப்பம் பெற்று ஒன்றிய அரசின் சுகா தாரத் துறையின் நேர்காணல் மூலம் புதிதாக இயக்குநர்கள் நிய மிக்கப்பட்டு வருகிறார்கள்.  புதிய இயக்குநர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, பதவி ஏற்கும் இடைப்பட்ட காலத்தில் ஜிப்மரில் பணிபுரியும் மூத்த பேராசிரியர்கள் இடைக்கால இயக்குநராக பதவி ஏற்றுக் கொள்வார்கள். ஜிப்மர் இயக்கு நர் பணிக் காலம் 5 ஆண்டுகள் அல்லது 65 வயது வரை மட்டுமே.  அதற்கு மேல் பணியில் நீட்டிக்க ஜிப்மர் சட்டம் 2008 அனு மதிப்பதில்லை. ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால் பணிக்காலம் கடந்த ஆண்டு டிசம்பர் 31 அன்று முடி வடைந்தது. எனவே,ஜிப்மரில் பணி புரியும் மூத்த பேராசிரியர் ஒருவரை இயக்குநராக பணியமர்த்த வேண்டும்.  அந்த வகையில் தற்போது ஜிப்மரில் பணிபுரியும் மூத்த பேராசி ரியர் ‘பழங்குடியின-மலைச் சாதியை’ சேர்ந்தவர் என்பதால் இடைக்கால இயக்குநர் பதவி மறுக்கப்பட்டு,பேராசிரியர் ராகேஷ் அகர்வாலுக்கு பணி நீட்டிப்பு செய்துள்ளது.  ஒன்றியத்தில் ஆளும் பாஜக சனாதன தர்மத்தை இதன் மூலம் நிலைநாட்டி வருகிறது. அனைத்து சாதியினரையும் பாஜக ஒரே கண்ணோட்டத்துடன் பார்க்கிறது என்கிற பிரதமர் மோடியின் வார்த்தை ஜாலம்-வெற்று தம்பட்டம் வெட்ட வெளிச்சமாய் இருக்கிறது. ஜிப்மர் தன்னாட்சியின் போது மக்களவையில் இயற்றப்பட்ட சட்டம் மற்றும் விதிமுறைகளை புறந்தள்ளிவிட்டு, சனாதன தர்மத்தை முன்னிறுத்த பிரதமர் மோடி அரசு துடிக்கிறது. ஜிப்மரில் பணிபுரியும் பேராசிரி யர்கள் மற்றும் ஊழியர்கள் அரசின் விதிமுறைகளை பின்பற்ற வில்லை என்று முழக்கமிடும் பேராசிரியர் அகர்வால் நாடாளுமன்ற சட்டம் மற்றும் விதிகளை மீறி எப்படி பதவி நீடிக்கப்பட்டது.  ஆர்.எஸ்.எஸ். மற்றும் சனா தான கொள்கைகளை தூக்கி பிடிப்ப தால், பேராசிரியர் அகர்வாலுக்கு பதவி நீட்டிப்பு கொடுக்கப்பட்டதா என்ற சந்தேகம் எழுகிறது.தனது பணி காலத்தை நீட்டிக்க கொள்ளை புறமாக முயற்சி செய்துள்ள பேராசி ரியர் அகர்வாலுக்கு நிர்வாக சட்டங்களை நடைமுறை படுத்த எள்ளவும் அருகதையில்லை.  ஜிப்மரில் பணிபுரியும் மருத்து வர், ஊழியர்கள் மற்றும் தினக்கூலி ஊழியர்கள் உரிமைகள் மற்றும் வாழ்க்கையோடு விளையாடும் பேராசிரியர் அகர்வால்,  மனிதா மானமற்ற செயலை ஜிப்மர் பாது காப்பு குழு வன்மையாக கண்டிக்கிறது. பிரதமர் மோடி அரசு உடனடியாக பேராசிரியர் அகர்வாலை இயக்கு நர் பதவியிலிருந்து நீக்கி, ஜிப்மரில் பணியாற்றும் மூத்த பேராசிரியரை இடைக்கால இயக்குநராக நியமிக்க வேண்டும் என ஜிப்மர் பாதுகாப்புக் குழு  வலியுறுத்துகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

விழிப்புணர்வு மாரத்தான்: வேலூர் ஆட்சியர் அழைப்பு

வேலூர்,ஜன.2- வேலூர் மாவட்டத்தில் மது, போதை பொருட்கள் பயன்பாட்டிற்கு எதிராக நடைபெற உள்ள விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் கலந்து கொள்ளுமாறு பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஆட்சியர் பெ. குமாரவேல் பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். வேலூர் மாவட்டத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் சார்பில்,  அருந்துதல், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதற்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் போதை பொருட்களின் பயன்பாட்டுக்கு எதிராக விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக விழிப்புணர்வு மாரத்தான் சனிக்கிழமையன்று (ஜன.6)  காலை 7 மணிக்கு காட்பாடியில் உள்ள விஐடி பல்கலைக்கழகத்தில் இருந்து துவங்குகிறது. இந்த மாரத்தான் போட்டியில் மக்களவை, சட்டமன்ற உறுப்பினர்கள் மாநகர மேயர், உள்ளாட்சி பிரதிநிதிகள், காவல் துறையினர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த மாரத்தான் ஓட்டப் போட்டிக்கான தூரம் 5 கிலோ மீட்டர் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்ற விருப்பமுள்ளவர்கள் 17 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் தாங்கள் பயிலும் கல்வி நிலையங்களின் மூலம்  முன்பதிவு செய்து கொண்டு அடையாள அட்டையுடன் வரவேண்டும். பொதுமக்கள், தன்னார்வலர்களும் இந்த மாரத்தான் போட்டியில் கலந்து கொள்ளலாம். பங்கேற்பாளர்கள் போட்டி நாளன்று நேரடியாகவும் பதிவு செய்து கொள்ளலாம். வெற்றி பெறும் இரு பாலருக்கும் தனிதனியாக முதல் பரிசாக ரூ.10,000 மற்றும் கேடயம் வழங்கப்படும். இரண்டாம் பரிசாக ரூ.7,000, மூன்றாம் பரிசு ரூ.5,000 மற்றும் கேடயங்கள் வழங்கப்படுகிறது.

கடலூரில் ராணுவத்திற்கு  நாளை ஆள்சேர்ப்பு முகாம்

கடலூர், ஜன.2- கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் (ஜன.4) அன்று  நடைபெற உள்ளதால், ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது. அக்னிபத் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்திற்கு 2024 ஆம் ஆண்டிற்கான ஆட்கள் சேர்ப்பு முகாம் கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் ஜன. 4 முதல் 13 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக அண்ணா விளையாட்டரங்க வளாகத்தில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  தடுப்பு கட்டைகள் அமைத்து ஆட்சேர்ப்பு முகாமுக்கு வருபவர்கள் வரிசையாக செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆங்காங்கே மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. குடிநீர் வசதி, கழிவறை உள்ளிட்ட வசதிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. விளையாட்டரங்கம் முழுவதும் ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆள் சேர்ப்பு முகாமை முன்னிட்டு அண்ணா விளையாட்டரங்கில் பொதுமக்கள், விளையாட்டு வீரர்கள், நடைபயிற்சி மேற்கொள்ள கடந்த 28 ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தாழங்குடா மீனவர் சிறைபிடிப்பு

கடலூர்,ஜன.3- தாழங்குடா பகுதியில் இருந்து, புதுச்சேரி பகுதிக்கு கனவா மீன் பிடிக்க சென்ற மீனவர்களை, அந்த பகுதி மீன வர்கள் சிறை பிடித்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் அருகே தாழங்குடா மீனவர் கிராமம் உள்ளது. அங்கிருந்து தினந்தோறும் ஏராளமான விசை மற்றும் பைபர் படகுகள் மீனவர்கள் மீன் பிடிக்க சென்று வருகின்றனர். அதன்படி செவ்வாய் கிழமை காலை தாழங்குடா பகுதியை சேர்ந்த 7 பேர் கனவா மீன் பிடிப்ப தற்காக பைபர் படகில் கடலுக்கு சென்றனர். புதுச்சேரி வீராம்பட்டினம் கடல் பகுதியில் சென்று கனவா மீன்களை பிடித்துள்ளனர். இதைப் பார்த்த அந்த பகுதியை சேர்ந்த மீனவர்கள், எங்கள் பகுதியில் வந்து கனவா மீன் பிடிக்கக் கூடாது என்று ஏற்கெனவே நாங்கள் அறிவுறுத்தியுள்ளோம். அதையும் மீறி நீங்கள் ஏன் இங்கு வந்து பிடிக்கிறீர்கள் என்று, கேட்டு 7  பேரையும், பைபர் படகை யும் சிறைபிடித்து சென்றதாக தெரிகிறது.  மேலும் அவர்களை ஊர் பஞ்சாயத்தில் ஒப்படைத்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த கடலூர் மீன்வளத்துறை அதி காரிகள் மற்றும் தேவனாம்பட்டினம் மற்றும் வீராம்பட்டினம் காவல்துறையினர், புதுச்சேரி மீன்வளத்துறை அதிகாரி களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமூக முடிவு ஏற்பட்டதை அடுத்து தாழங்குடா பகுதியை சேர்ந்த ஏழு மீனவர்களையும் பைபர் படகையும் விடுவித்தனர்.