கடலூர், ஜன.6- தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி தொடக்க விழா கடலூரில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவொளி வரவேற்றார். அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்து மாணவர்களின் படைப்புகளை அமைச்சர்கள் பார்வையிட்டனர். இதில் 38 மாவட்டங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது அறிவியல் படைப்புகள் கண்காட்சியில் பார்வைக்கு வைத்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஐயப்பன், சபா.ராஜேந்திரன், சிந்தனைச் செல்வன், ராதாகிருஷ்ணன், மாநகராட்சி மேயர் சுந்தரி, துணை மேயர் தாமரைச்செல்வன், தனியார் பள்ளிகள் இயக்ககம் இயக்குனர் நாகராஜ முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தொடக்கக்கல்வி இயக்ககம் இயக்குனர் கண்ணப்பன் நன்றி கூறினார். பள்ளிகளில் சாதி பாகுபாடு: அமைச்சர் விளக்கம் பின்னர் செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி, “பள்ளிகளில் சாதி பாகுபாடு அதிக அளவில் உள்ளதாக தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பு பட்டியல் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே நாங்குநேரி சம்பவம் தொடர்பாக பள்ளிகளில் சாதி பாகுபாடு குறித்து முதல்வர் உத்தரவு படி ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் அறிக்கை மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்”என்றார். பள்ளிகளில் சாதி பாகுபாடு, பாலியல் தொல்லை மற்றும் போதை பொருள் பழக்கம் தொடர்பாக மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.