சென்னை, மே 20 - கோவில் நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு நியாயமான வாடகையை நிர்ணயிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து சமய நிறுவன நிலங்களை பயன்படுத்துவோர் பாதுகாப்பு சங்கம் வலியுறுத்தி உள்ளது. இந்த சங்கத்தின் மத்திய சென்னை மாவட்ட அமைப்பு மாநாடு புதனன்று (மே 18) சூளைமேட்டில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், கோவில் நிலங்களில் வசிப்போருக்கு இந்து சமய அறநிலையத்துறை சட்டம் 34ன் படி குடிமனைப் பட்டா வழங்க வேண்டும், அரசாணை 318ஐ அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த மாநாட்டிற்கு கே.முருகன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா துவக்கவுரையாற்றினார். சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர்கள் வ.செல்வம், எம்.நடராஜன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில் மாவட்டத் தலைவராக வி.குணசேகர், செயலாளராக வழக்கறிஞர் கே.முருகன், பொருளாளராக வி. செந்தில்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்