விழுப்புரம்,ஏப்.22- விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட விவசாயிகளின் குறைகேட்பு நாள் கூட்டம் ஆட்சியர் மோகன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.டி.முருகன் பேசுகையில்,“ மாவட்டத்தில் உரத் தட்டுப்பாடு நிலவும் நிலையில், விவசாயிகளுக்கு இடுபொருள் விற்பனை செய்யும் கடைகளில் கூடுதல் விலைக்கு உரங்கள் விற்கப்படுகிறது. அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். இதற்கு பதில் அளித்த மாவட்ட ஆட்சியர் மோகன், “விவசாயிகள் கோரிக்கைகள் மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். இதைத்தொடர்ந்து, விழுப்புரம் நேருஜி சாலையிலுள்ள ஒரு தனியார் உர விற்பனை கடை ஆய்வு செய்தபோது கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. உடனடியாக அந்த கடைக்கு மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் சீல் வைக்கப்பட்டது. மாவட்டத்திலுள்ள உர விற்பனை கடைகளில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடைகளுக்கு சீல் வைத்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கைவிடுத்தார். மாவட்ட ஆட்சியரின் இந்த நடவடிக்கை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்றுள்ளது.