districts

img

பள்ளத்தில் இறங்கி பொதுமக்கள் போராட்டம்

திருப்பத்தூர், ஜூன் 4- திருப்பத்தூர் அருகே குழாய் பதிக்க தோண்டிய பள்ளத்தை மூடாததால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் வாலேரி ஏரியில் இருந்து ராவுந்தம்பட்டி கிராமத்தில் உள்ள கொரட்டி ஏரிக்கு நீர் எடுத்து வர சேலம் மெயின் ரோட்டில் இருந்து ராவுந்தம்பட்டி வழியாக பொதுப்பணித்துறை மூலம் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் 20 அடி அகலம், 30 அடி ஆழத்தில் குழாய் பதிக்க பள்ளம் தோண்டப்பட்டு 8 மாதங்கள் ஆகிறது. இதனால் தோண்டப்பட்ட பகுதிகளில் உள்ள நிலங்களுக்கு மற்றும் வீடுகளுக்கு பொதுமக்கள் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் உடனடி யாக பள்ளத்தில் குழாய் புதைத்து பள்ளங்களை மூட வேண்டும் என பல முறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் திடீரென சேலம் பிரதான சாலையில் இருந்து ராவுந்தம்பட்டி செல்லும் சாலையில் நின்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் வெட்டபட்ட பள்ளத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறு கையில், பல மாதங்களாக வெட்டப்  பட்ட பள்ளங்களில் குழாய்கள் புதைக்கப் பட்டவில்லை. இதனால் எங்களுடைய விளை நிலங்களுக்கு செல்ல முடியவில்லை, நிலத்தில் டிராக்டர் ஓட்ட முடியவில்லை, பயிர் செய்ய முடியவில்லை. 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு செல்ல சிறிய பாதை வழியாக செல்ல வேண்டியுள்ளது. குடிநீர் எடுத்துச் செல்ல முடியவில்லை. குழந்தைகள், முதியவர்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை, இந்த திட்டம் செயல்படுத்த முடியுமா என தெரியவில்லை. கடந்த மாதம் இந்த பள்ளத்தில் விழுந்து ஒருவர் இறந்து விட்டார். இந்தப் பகுதியில் அரசு மதுபானக்கடை உள்ளதால் தினசரி இரவு நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். எனவே உடனடியாக பள்ளத்தை மூடவேண்டும் என தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கந்திலி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.