districts

img

புதுச்சேரியில் காற்றாடி திருவிழா: மக்களிடம் தனியார் நிறுவனம் வசூல் வேட்டை

புதுச்சேரி,ஆக.27- புதுச்சேரி சின்ன வீராம்பட்டினம் ஈடன் பீச் கடற்கரையில் ஆகஸ்ட் 23, 24 ,25 ஆகிய தேதிகளில் தனியார் நிறுவனம் ஒன்று காற்றாடி திருவிழாவை நடத்தியது. இந்த நிகழ்ச்சி நடைபெறுவது கடற்கரை பகுதி என்பதால் புதுச்சேரி மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று நடத்த வேண்டும்.  ஆனால், அந்த தனியார் நிறுவனம் மாவட்ட ஆட்சியரிடம் மாலை 3 முதல் 6 மணி வரை காற்றாடி திருவிழாவிற்கு அனுமதி பெற்றது . இந்த நிகழ்ச்சி குறித்து விளம்பரங்கள் புதுச்சேரி மட்டுமல்லாது கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக செய்யப்பட்டிருந்தது.  இந்த நிகழ்ச்சியை காண்பதற்கு அந்த மூன்று நாட்களில் காலை முதல் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் ஈடன் பீச் கடற்கரையில் குவிந்தனர். இந்நிலையில், இந்த மூன்று நாட்களிலும் காலை முதலே பொதுமக்களிடம் ரூ.100 நுழைவு கட்டணமாக அந்த தனியார் நிறுவனம் வசூல் செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்த வசூல் குறித்து ஆகஸ்ட் 23 அன்று அரசு அதிகாரிகளுக்கு பல்வேறு தரப்பினர் புகார் தெரிவித்திருந்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. கடற்கரை மணல் பரப்புகளில் தனியார் நிறுவனங்கள் நிகழ்ச்சி நடத்துவதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.ஆனால் எந்த விதத்திலும் பொதுமக்களிடம் கட்டணம் என்ற பெயரில் வசூலில் ஈடுபடக்கூடாது என்று அரசு உத்தரவுகள் இருப்பதாக கூறப்படுகிறது.  இது குறித்து, புதுச்சேரி அரசு சுற்றுலாத்துறை அதிகாரி சுப்பிரமணியமிடம் கேட்டபோது, சின்ன வீராம்பட்டினம் ஈடன் பீச் கடற்கரை பகுதி கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் ஸ்பைஸ் ரூட் என்கிற தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் அடிப்படையில் ஒப்படைத்துவிட்டோம். வருமான பகிர்வு என்ற அடிப்படையில் இந்த நிறுவனம் சுற்றுலாத் துறைக்கு மாதந்தோறும் ரூபாய் மூன்று லட்சம் அளிக்கிறது” என்றார். இந்த ஒப்பந்தம் ஐந்து ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்றும் அதாவது 2027 ஆம் ஆண்டு வரை இந்த தனியார் நிறுவனம் இந்த கடற்கரை பகுதியை பார்த்துக் கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார். காற்றாடி திருவிழாவில் பொதுமக்களிடம் வசூல் செய்யப்பட்டது குறித்து அந்த நிறுவனத்திடம் தான் கேட்க வேண்டும் என்று முடித்துக் கொண்டார். வார இறுதி நாட்களில் சற்று இளைப்பாற, பொதுமக்கள்  புகலிடமாக இருக்கும் கடற்கரைப் பகுதிகளை இப்படி தனியாருக்கு ஒப்பந்தம் தருவதன் மூலம் மக்களிடம் பணம் வசூலிக்கும் முறையினால் ஏழை எளிய, நடுத்தர குடும்பங்கள் கடற்கரைப் பகுதிகளில் இருந்து தள்ளி வைக்கப்படும் என்கிற ஆபத்து ஏற்பட்டுள்ளது.  இந்த காற்றாடி திருவிழாவில் மட்டும் பல லட்சங்களை அந்த தனியார் நிறுவனம் பொதுமக்களிடம் அதிகாரிகள் துணையோடு வசூல் வேட்டை நடத்தியுள்ளது அம்பலம் ஆகியுள்ளது. இப்படி கடற்கரைப் பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் ஆண்டுதோறும் பல கோடிகளை தனியார் நிறுவனங்கள் அள்ளிக்கொண்டு அரசு சுற்றுலாத்துறைக்கு சொற்ப தொகையை கொடுத்து வருகின்றன.  நிலையை உணர்ந்து இந்த தனியார் நிறுவனங்களின் ஒப்பந்தங்களை ரத்து செய்வதற்கு மக்களின் கடற்கரை பகுதிகளையும் நிலங்களையும் அரசின் பொது வருமானத்தையும் தனியார் நிறுவனங்களிடமிருந்து பாதுகாக்க மக்கள் போராட்டங்கள் தற்போதைக்கு அவசியமாகிறது.                  - நா.பிரபுராஜ்