திருவண்ணாமலை, நவ.8 – சின்னபாலியப்பட்டு கிராமத்தில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருவண்ணாமலை ஒன்றியம், சின்ன பாளையப்பட்டு கிராமத்தில் உள்ள பள்ளிக்கூட தெருவில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 10 நாட்களாக பொதுக் குழாய் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வரு வதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இது குறித்து உள்ளாட்சி நிர்வாகிகளிடம் தகவல் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதனால், அப்பகுதி மக்கள் குடிநீருக்காக விவசாய நிலங்களில் உள்ள கிணறுகளில் இருந்து குடிநீர் கொண்டு வந்து பயன்படுத்துகின்றனர். எனவே உடனடியாக குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதை சரி செய்து சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும் என, அப்பகுதி மக்கள், விவசாயிகள் சங்கத்தின் கிளை தலைவர் பி. சம்பத் தலைமையில், திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். அப்போது சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். ராமதாஸ், தவிச ஒன்றிய செயலாளர் ராஜகோபால், வேங்கிக்கால் கிளைச் செயலாளர் எஸ். ஆனந்தன், சிஐடியு துணைசெயலாளர் கமலக்கண்ணன், கிளைச் செயலாளர் சின்னப் பையன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.