ஆம்பூர்,டிச.23- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள் பெரிய கொம்மேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் சோபனா. இவரது கணவர் கோவிந்தராஜ்(40). சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை யோரம் டிவி (மெக்கானிக்) பழுது நீக்கம் செய்யும் கடை நடத்தி வருகிறார். அவரது கடைக்கு அருகாமையில் அதே பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (36) கஞ்சா வியாபாரம் செய்து வந்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் ஆம்பூர் நகர காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வந்த வெங்கடேசன், கோவிந்தராசை சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார். இதைப் பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த காவலர்கள் கோவிந்தராஜின் உடலை கைப்பற்றி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து ஆம்பூர் டிஎஸ்பி சரவணன் தலைமையில் தனிப்படை அமைத்து கொலையாளியை தேடி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.