திருவண்ணாமலை,அக். 30– ஏரி, குளங்களை தூர்வாரி நீராதாரத்தை பாதுகாக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேத்துப்பட்டு வட்டார சிபிஎம் மாநாடு கோரிக்கை விடுத்துள்ளது. திங்களன்று (அக்.28) சேத்தப்பட்டு கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மாநாட்டில் மாநாட்டு கொடியை ஆர்.சேகர் ஏற்றி வைத்தார். கே.மணிவண்ணன் வரவேற்றார். அண்ணாமலை, சாந்தி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற மாநாட்டை மாவட்ட செயற்குழு உறுப்பினர் ப.செல்வன் தொடங்கிவைத்து உரையாற்றினார். வேலை அறிக்கையை வட்டார செயலாளர் வி.எல்லப்பன் வாசித்தார். மாவட்ட குழு உறுப்பினர் ஆர்.சிவாஜி மாநாட்டை வாழ்த்திப் பேசினார். மாவட்ட செயலாளர் எம்.சிவக்குமார் மாநாட்டை முடித்துவைத்துப் பேசினார். இடைக்குழு தேர்வு 7 பேர் கொண்ட இடைக்குழுவின் செயலாளராக வி.எல்லப்பன் தேர்வு செய்யப்பட்டார். இந்த மாநாட்டில், சேத்துப்பட்டு தாலுகாவில் உள்ள ஏரி குளங்களை தூர்வாரி நீராதாரத்தை பாதுகாக்க வேண்டும், சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், சேத்துப்பட்டு தாலுகாவில் அரசு கலைக்கல்லூரி அமைக்க வேண்டும், சேத்துப்பட்டு பேரூராட்சியில் கொசுக்களை கட்டுப்படுத்த வாரம் இருமுறை கொசு மருந்து தெளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.