districts

img

கொண்டங்கி ஏரியை சுற்றுலாத் தலமாக்க வேண்டும்

        கடலூர் மாவட்டத்தில் சிறியதும் பெரியதுமாக  228 ஏரிகள் அமைந்துள்ளன. இவற்றுள் கடலூர் வண்டிப் பாளையத்தில் இருந்து அரை கி.மீ. தொலைவில் கேப்பர் மலையில், சிறைச்சாலைக்கு எதிரே மூன்று புறம் மலைகள் சூழ இயற்கைப் பேரெழிலுடன் அமைந்திருப்பது கொண்டங்கி ஏரி ஆகும். ஊட்டி. கொடைக்கானல், ஏற்காடு போன்ற  மலைவாசஸ்தலங்களில் சூழ ஏரிகள் அமைந்திருப்பது ஆச்சரிய மில்லை. ஆனால், தமிழகத்தின் சமவெளிப் பகுதியில் கடற்கரை யோரத்தில் அமைந்துள்ள ஒரு நகரத்தில் சுற்றிலும் மலைகள் சூழ 188 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் ஒரு ஏரி என்பது கடலூரில் மட்டுமே உள்ளது.

‘கொண்டம் போடுதல்’

     வயலுக்கு நீர் பாய்ச்சும் போது  மேடான இடங்களில் வாய்க்கால்க ளில் ஏற்றம் போட்டு இறைப்பது தான் வழக்கம். ஏற்றம் இறைக்காம லேயே வயலுக்கு நீர் பாய்ச்சுவதற்கு இப்பகுதி விவசாயிகளால் ஒரு முறை கையாளப்படுகிறது. விவசாயிகள் பலர் ஒன்று திரண்டு மாலை வேளையில், குறிப்பிட்ட ஓரிடத்தில் வாய்க்காலின் குறுக்கே செயற்கையாக ஒரு அணையைக் கட்டுவார்கள்.

     அதாவது, வாய்க்காலின் குறுக்கே கம்பங்களை நட்டு, அந்தக் கம்பங்களுக் கிடையே குறுக்குக் கழிகளைக் கட்டி அதனிடையே தழைக்கட்டு, வைக்கோல் கட்டு, மணல் முதலானவற்றைப் போட்டு உயரமாக நிரப்பி வாய்க்காலை அடைப்பார்கள். அதன் காரணமாக அந்தச் செயற்கை அணைக்குக் கீழ்ப்புறம் தண்ணீர் போகாமல் மேல்புறமே தேங்கிக் கரைக்கு மேல்  வழிந்து வயல்வெளிக்குப் பாயும். இரவு முழுவதும் நீர் பாய்ச்சிவிட்டு காலையில் இந்த அணையை எடுத்து விடுவார்கள். இந்த முறைக்கு ‘கொண்டம் போடுதல்’ என்று பெயர்.

    இந்த ஏரியும் கொண்டம் போட்டது போலத்தான் அமைந் திருக்கிறது. இதன் மேற்கு பகுதியில் மேல் ஏரி உயரத்திலும் கிழக்கு பகுதியில் கீழ் ஏரி தாழ்வாகவும் என  இரண்டு பகுதிகளாக இந்த ஏரி அமைந்துள்ளது. இயற்கையாகவே மேல் ஏரி நிரம்பி, கீழ் ஏரிக்கு தண் ணீர் வரும் வகையில் அமைந்துள்ள இந்த ஏரியின் அமைப்பில், மேல்  ஏரியின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. அதாவது ‘கொண்டம்’ போடப்பட்டுள்ளது. தன்னுள்ளே கொண்டம் கொண்டி ருக்கும் இந்த ஏரி ‘கொண்டங்கி’ என அழைக்கப்படுகிறது. மழைக் காலங்களில் மலையில் இருந்து வழிந்தோடி வரும் நீரால் நிரம்பும் இந்த ஏரிக்கு, கெடிலம் நதியில் திருவந்திபுரம் அணைக்கட்டில் இருந்து கிளைக் கால்வாய் பிரியும் ஒரு வழியாகவும் நீர் கிடைக்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்த ஏரிக்குள்ளே இயற்கையான பல நீரூற்றுக்களும் அமைந்துள்ளன.

பழமையான குடிநீர் திட்டம்

       ஒரு காலத்தில் சுற்று வட்டார கிராமங்களின் முக்கிய நீர்ப்பாசன மற்றும் குடிநீர்  ஆதாரமாகவும் திகழ்ந்தது.  இந்த  கரையில் போடப் பட்டுள்ள 10-க்கும் மேற்பட்ட ஆழ் துளைக் கிணறுகள் மூலமாக கடலூர் மாநகராட்சி  பகுதிகளுக்கு  குடிநீர் விநியோகம் செய்யப்படுகி றது. இந்த ஏரியின் நீரை கடலூர் மக்களின் குடிநீர் தேவையை நிறைவு செய்யப் பயன் படுத்தலாம் என்று ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் திட்டம் வகுக்கப்பட்டது. 1870 மற்றும் 1880-ல் கடலூர் மாவட்ட மருத்துவ மற்றும் சுகாதார அலுவலராக இருந்த சர்ஜன் - மேஜர் ஜி. ராபர்ட்சன் என்பவர் தான் கொண்டங்கி ஏரியின் நீரை கடலூர் மக்களின் குடிநீருக்குப் பயன்படுத்த திட்டம் வகுத்தார். இத்திட்டமானது ஆங்கிலேயர் காலத்தில் சென்னை மாகாணத்தில் செயல்படுத்தப்பட்ட பழமையான குடிநீர் திட்டங்களில் ஒன்றாகும்.

     18.72 மில்லியன் கன அடி வரை தண்ணீரை தேக்கி வைக்க  வாய்ப்புள்ள இந்தக் கொண்டங்கி ஏரி இன்றளவும் கடலூர் மக்களின் தாகம் தீர்த்துக் கொண்டிருக்கிறது. இந்த ஏரியை ஆழப்படுத்தி, மேல் ஏரியில் உள்ள அணைக்கட்டை பலப்படுத்தி, மதகுகளைச் சீர் செய்து இந்த ஏரியின் முழுக் கொள்ளளவிற்கும் நீரைத் தேக்கினால் இப்பகுதியின் நிலத் தடி நீர்மட்டம் வெகு வாக உயரும்.  மேலும் ஆண்டு முழுவதும் கொண்டங்கி ஏரியில் நீர் நிரம்பி இருக்கும். இதை சுற்றுலாத் தலமாக  மாற்றினால், மாநகராட்சிக்கு நல்ல  வருவாய் கிடைக்கும். தமிழகத்தின்  பல்வேறு பகுதியில் இருந்து சுற்றுலா  பயணிகள் வந்து செல்வார்கள். கடலூர் பொதுமக்களுக்கு சில்வர்  பீச் போல, மற்றும் ஒரு பொழுது  போக்கு இடம் கிடைக்கும்.  “இந்த ஏரியின் கரைகளை சீர் செய்து, அழகு படுத்தி சுற்றிலும் பூங்காக்கள் அமைத்து, கொடைக்கானலில் அமைந்திருக்கும்

     புகழ்மிக்க கோக்கர்ஸ் வாக் போல அழகிய நடைபாதை அமைத்து. ஏரியில் படகுச் சவாரிக்கும் ஏற்பாடு செய்தால் இந்த  இயற்கை எழில் கொஞ்சும் கவின்மிகு கொண்டங்கி ஏரி கடலூர்  மாவட்ட மக்களை மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதி களைச் சேர்ந்த மக்களையும் கவர்ந்திழுக்கும். சுற்றுலா மைய மாக மாறும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.