சென்னை, நவ.21- பல நூற்றாண்டுகள் கடந்து இன்னமும் உயிர்ப்போடு இருக்கிற காவியமான கம்பராமாயணத்தில் இருந்து கவிதை வரிகளை வாசித்தல் மற்றும் அதனை இசைவடிவில் பாடும் நிகழ்ச்சி சென்னையில் வரும் சனிக்கிழமை (நவ.23) நடைபெறவுள்ளது. நாரத கான சபாவில் மாலை 6 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் உலக புகழ்பெற்ற கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் முகமது ரேலா மற்றும் மகப்பேறு மருத்துவர் டாக்டர் பிரியா ராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்கிறார்கள். இவர்கள் கம்ப ராமாயணத்தில் இருந்து கவிதை வரிகளை ஆங்கிலத்தில் வாசிக்க அதை தமிழில் பாடலாக பிரபல கர்நாடக இசைப்பாடகர் சிக்கில் குருசரண் பாட உள்ளார். 90 நிமிடங்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் 14 பாடல்கள் இடம் பெறுகின்றன. கம்பனின் அற்புதமான படைப்பின் சாரத்தையும் பொருள் விளக்கத்தையும் இசையோடு ஒருங்கிணைக்கின்ற அனுபவமாக இந்த நிகழ்ச்சி இருக்கும் என்று மருத்துவர் முகமது ரேலா கூறினார். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தாலும் கல்லூரி காலத்தில் இருந்தே தமிழ்மீதும் தமிழ் இலக்கியங்கள் மீதும் தமக்கு மிகுந்த ஆர்வம் உண்டு என்றும் அவர் கூறினார்.