districts

செங்கல்பட்டு நகராட்சியில் தாய் சேய் நல மையம் தொடக்கம்

செங்கல்பட்டு, ஆக. 1 -

    செங்கல்பட்டு நகராட்சி, யானைக்கால் நோய் தடுப்பு மருத்துவமனையில் உள்ள துணை சுகாதார இயக்குநர் அலுவலகத்தில் கர்ப்பிணி தாய்மார்களை தொடர்ந்து கண்காணிப்பதற்காக 24 மணி நேர தாய் சேய் நல கட்டுப்பாடு மையம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா திங்களன்று நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் தொடங்கி வைத்தார்.

     பின்னர் அவர் பேசும்போது, 'செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒவ்வொரு வருடமும் சுமார் 37,000 கர்ப்பிணிகள் தங்கள் கர்ப்பத்தை பதிவு செய்கின்றனர். இவர்களில் சுமார் 13,000 கர்ப்பிணிகள் சிக்கல் உள்ள கர்ப்பிணிகள் என்று கண்டறியப்பட்டுள்ளது.  

    கர்ப்ப காலத்தில் ஏற்படும் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், ரத்த சோகை, தைராய்டு போன்ற அதிக கவனம் தேவைப்படும் கர்ப்பிணிகளை கண்டறிந்து, தொடர்ந்து கிராம சுகாதார செவிலியர்கள் கண்காணித்து வருகின்றனர்.  

    செங்கல்பட்டு மாவட்டத்தில் இந்த சிக்கலில் கர்ப்பிணிகளை தொடர்ந்து கண்காணிப்பதற்காக துணை இயக்குநர் அலுவலகத்தில் 24 மணி நேர தாய் சேய் நல கட்டுப்பாட்டு மையம் இயங்கும். இந்த கட்டுப்பாட்டு அறையி லிருந்து தினமும் சிக்கல் உள்ள கர்ப்பிணிகள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்கள் சிகிச்சைக்கு சென்றனரா, தேவைப்படும் பரிசோதனைகள் மேற்கொண்டனரா? என்பதை கண்காணிப்பது அவர்களை தொடர் சிகிச்சைகள் மற்றும் பரிசோத னைகள் அவசியம் பற்றிய அறிவுரைகள் வழங்கப்படும்.

     மேலும், சந்தேகங்கள் இருப்பின் இந்த 24 மணி நேர தாய் சேய் நல கட்டுப்பாட்டு அறையில் தொலைபேசி எண் 7339697545 மற்றும் 7200210545-களில் தொடர்பு கொள்ளலாம்' என தெரிவித்தார்.