சென்னை,பிப்.20- ஆவின் நிறுவனம் சார்பில் 'இல்லம் தேடி ஆவின்' என்ற பெயரில் தள்ளுவண்டி மூலம் வீடு வீடாக சென்று ஆவின் ஐஸ்கிரீம் விற்பனை செய்யும் திட்ட தொடக்க விழா சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் வியாழனன்று அமைச்சர் சா.மு.நாசர் தலைமையில் நடைபெற்றது. பேட்டரி தள்ளு வண்டிகளில் ஐஸ் கிரீம் விற்பனையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். வீடு தேடி ஐஸ் கிரீம் விற்பனை செய்யும் இந்த வேலை வாய்ப்பு பெண்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதில் ஒரு பேட்டரி வண்டி மற்றும் குளிர் சாதன பெட்டியின் விலை ரூ.1 லட்சத்து 21 ஆயிரத்து 658 ஆகும். ரூ.10 ஆயிரம் டெபாசிட் கட்டிய பெண்களுக்கு இந்த வண்டி வழங்கப்பட்டது. வீடு வீடாக சென்று ஆவின் ஐஸ் கிரீம் விற்பனை செய்யும் பெண்களுக்கு ஒரு மொபைல் செயலி வழங்கப்பட்டுள்ளது. இந்த செயலியில் விற்பனை செய்வதற்கு என்னென்ன ஐஸ் கிரீம்கள் எவ்வளவு வேண்டும் என்பதை முந்தைய நாள் இரவே ஆர்டர் செய்து ஆன்லைனில் பணம் செலுத்த வேண்டும். மறுநாள் காலை யில் அவர்களின் இருப்பிடத்துக்கு சென்று ஐஸ்கிரீம் விநியோகம் செய்யப்படும். இதை அவர்கள் வீடுகள் தோறும் சென்று விற்பனை செய்யலாம். ஐஸ்கிரீம் விற்பனை செய்யும் பெண்கள் கமிசன் அடிப்படையில் வருவாய் ஈட்டலாம். குல்பி, கப் ஐஸ், சாக்கோபார், கசாட்டா, கேண்டி, பிரிமீயம் ஐஸ்கிரீம் உள்ளிட்ட 100 வகை ஐஸ்கிரீம்களை விற்பனை செய்யலாம். பொதுமக்கள் கூடும் இடங்களிலும் ஆவின் ஐஸ்கிரீம் விற்பனை செய்யப்படும். பள்ளி, கல்லூரி, குடியிருப்பு நிகழ்ச்சிகள், திருமணம், திரு விழா உள்ளிட்ட விழாக்களில் ஐஸ்கிரீம் தேவைப்பட்டாலும் இந்த பேட்டரி தள்ளு வண்டிகளில் ஐஸ் கிரீம் அனுப்பி வைக்கப்படும். ஆவின் பாலகத்தில் ஏற்கனவே லஸ்சி, தயிர், மோர், ஐஸ்கிரீம் ஆகியவை விற்பனை செய்யப்படுகிறது. தற்போது கோடையை முன்னிட்டு வீடுகளுக்கே சென்று ஐஸ்கிரீம் விற்பனை செய்யப்படுகிறது.