districts

செல்போன் பறித்தபோது தவறி விழுந்த இளம் பெண் மருத்துவமனையில் பலி

சென்னை, ஜூலை 8-

    சென்னையில் பறக்கும் ரயிலில் இளம்பெண் ஒருவர் செல்போன் பறிப்பின் போது தவறி விழுந்து உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

    கோட்டூர்புரத்தை சேர்ந்தவர் பிரீத்தி. பட்டதாரி இளம்பெண்ணான இவர் படித்து முடித்துவிட்டு தனியார் நிறுவனம் ஒன்றில் கணக்கராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 2-ந் தேதி பறக்கும் ரயிலில் பயணம் செய்தார். அடையாறு இந்திரா நகர் ரயில் நிலைய நடைமேடையில் நின்று கொண்டிருந்த 2 பேர் பிரீத்தி செல்போனை பறித்தனர். ரயில் புறப்பட்ட நேரத்தில் வாலிபர்கள் இருவர் சேர்ந்து செல்போனை பறித்து இழுத்ததால் பிரீத்தி தவறி கீழே விழுந்தார். இதில் அவரது தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது.  

    மயக்க நிலைக்கு சென்று பிரீத்தி சுயநினைவை இழந்தார். இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு பிரீத்தி சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சனிக்கிழமையன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை பார்த்து விசாரணை நடத்தினர். இதில் பட்டினப்பாக்கத்தை சேர்ந்த வினோத், அடையாரை சேர்ந்த மணிமாறன் ஆகிய இருவரும் பிரீத்தியின் செல்போனை பறித்து அவரது உயிரிழப்புக்கு காரணமானது தெரியவந்தது. இதை தொடர்ந்து இரு வரையும் காவல்துறையிரையினர்  கைது செய்தனர். இந்த வழிப்பறி மற்றும் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

;