சென்னை, டிச. 19 - பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தக் கோரி வியாழனன்று (டிச.19) சென்னையில் ஓய்வூதியர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். போக்குவரத்து கழக ஓய்வூதியர்ளுக்கு 109 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும், மாதத்தின் முதல் தேதியன்று ஓய்வூதியம் வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்பு நிதியை 1.50 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும், ஒன்றிய அரசு அறிவிக்கும் அதேநாள் முதல் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும், அரசு ஊழியரை போன்று அனை வருக்கும் பணிக்கொடையை ரூ.25 லட்ச மாக உயர்த்த வேண்டும், 70 வயது நிறைந்தவர்களுக்கு ஓய்வூதியத்தில் 10 விழுக்காடு உயர்வு வழங்க வேண்டும், மின்வாரிய ஓய்வூதியத்திற்கு அரசு உத்தரவாதம் அளிக்காத ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 17 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்ட மைப்பு சார்பில் பல்லவன் இல்லம் முன்பு இந்த போராட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பின் சென்னை மாவட்டத் தலைவர் பி.ஏபெல் தலைமையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் பொதுச் செயலாளர் கே.கர்சன் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.சுப்பிரமணியம் நிறைவுரையாற்றினார். கூட்டமைப்பின் மாவட்டச் செயலாளர் என்.கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் ஏ.முத்துக்குமார் மற்றும் கூட்டமைப்பில் உள்ள அரசு, பள்ளிக் கல்லூரி ஆசிரியர், குடிநீர் வாரியம் உள்ளிட்ட ஓய்வூதியர் சங்கங்களின் மாவட்ட நிர்வாகிகள் உரை யாற்றினர்.