ராணிப்பேட்டை, ஜூன் 9 -
ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் நடைபெறும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ச. வளர்மதி கேட்டுக் கொண்டுள்ளார்.
தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் தமிழ்நாடு அரசு, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை வேலை வாய்ப்பு பிரிவின் சார்நிலை அலுவலகங்க ளில் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் ஒவ்வொரு மாதத்தின் மூன்றாம் வெள்ளிக்கிழமைகளில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
அதனடிப்படையில் இம்மாதத்தில் ஜூன் 16 வெள்ளிக்கிழமையன்று ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இதில் பல முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. இந்த வேலை வாய்ப்பு முகாமில் 8 ஆம் வகுப்பு முதல் பொறியியல், டிகிரி படித்தவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். இத்தனியார் வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமனம் பெறுபவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது என்று செய்திக் குறிப்பில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார்.