districts

img

நகராட்சி அலுவலக வாசலில் கழிவுநீரை கொட்டி ஆர்ப்பாட்டம்

அம்பத்தூர், அக். 26- திருவேற்காடு நகராட்சி அலுவலக வாசலில் பொதுமக்கள் கழிவுநீரை கொட்டி  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவேற்காடு சிறப்பு நிலை நகராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் 10ஆவது வார்டுகுட்பட்ட ராமதாஸ் நகர், ராஜரத்தினம் நகர் ஆகிய பகுதிகளில் கழிவு நீர் கால்வாய் அமைக்கப்படவில்லை. தார் சாலை வசதி இல்லை. இதுகுறித்து பலமுறை நகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் அந்த பகுதி மக்கள் 4 குடங்களில் கழிவு நீரை கொண்டு வந்து நகராட்சி அலுவலகத்தில் வாசலில்  கொட்டி வியாழனன்று (அக். 26) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சாலை  மறியலில் ஈடுபட்டனர்.  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருவேற்காடு காவல்  துறையினர், நகராட்சி தலைவர் என்.இ.கே. மூர்த்தி, துணைத் தலைவர் ஆனந்தி ரமேஷ்,  நகராட்சி ஆணையாளர் ஏ.ஜஹாங்கீர் பாஷா ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சு நடத்தினர். அப்போது கழிவு நீர் கால்வாய் அமைக்கப்படும் என்றும், சாலைகள் சீரமைக்கப்படும் என்றும் தெரிவித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.