விழுப்புரம், ஜூலை.8-
விழுப்புரம் மாவட்டம்,கண்டாச்சிபுரம் அருகே அலுவலகத்துக்கு வராத கிராம நிர்வாக அலுவலரை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டம்,கண்டாச்சிபுரம் வட்டத்திற்கு உட்பட்டது ஒட்டம்பட்டு கிராமம், இக்கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு அதே கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று கூடி திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கிராம நிர்வாக அலுவலர் தேசிங்கு என்பவர் அலுவலகத்திற்கு வருவதில்லை என்றும், முதியோர் உதவித்தொகை பெறுவதற்கு லஞ்சம் கேட்பதாகவும் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களை அவர் மீது முன் வைத்தனர்.
உடனடியாக இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த அரகண்டநல்லூர் காவல்நிலையத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம பொதுமக்களிடம் பேச்சு நடத்தினர். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்துவிட்டனர். கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் கற்பகம் அங்கு வந்து கிராம நிர்வாக அலுவலர் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதை ஏற்று கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.