புதுச்சேரி, மே 5- புதுச்சேரியில் குழந்தைகள் அறிவியல் திருவிழா நடைபெற்றது. புதுவை அறிவியல் இயக்கம், சமம் பெண்கள் இயக்கம் மற்றும் உதவி கரங்கள் ஆகிய அமைப்புகள் இணைந்து குழந்தைகள் அறிவியல் திருவிழா கொண்டாடபட்டது. புதுச்சேரி, பெரிய காட்டுபாலையம் அப்ரெஸ் நர்சரி பிரைமரி பள்ளியில் 2 நாள் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதுச்சேரி அறிவியல் இயக்கத் துணைத் தலைவர் ஹேமாவதி தலைமையுரை ஆற்றினார். புதுச்சேரி அரசின் திட்டம் மற்றும் ஆராய்ச்சி துறையின் செயலர் டாக்டர் அ.முத்தம்மா பங்கேற்று சிறப்புரைபயாற்றினார். அறிவியல் இயக்கத் தலைவரும், பாரதிதாசன் மகளிர் கல்லூரி இயற்பியல் துறைத் தலைவர் டாக்டர் மதிவாணன், அறிவியல் இயக்க செயலாளர் முருகவேல் மற்றும் சமம் பெண்கள் இயக்கத் தலைவர் அன்பரசி ஜெயக்குமார், உதவி கரங்கள் நிறுவனர் ஆலிஸ் தாமஸ், சமம் இயக்க செயலாளர் இளவரசி, அறிவியல் இயக்கப் பொருளாளர் ரமேஷ் ஆகியோர் வாழ்த்திப்பேசினர். நிகழ்ச்சியில் அறிவியல் கற்பித்தல், அறிவியல் மனப்பான்மையை இனிமையாக வளர்த்துக் கொள்வதற்காக செய்முறையிலும், விளையாட்டு முறையிலும் குழந்தைகளுக்கு கருத்தாளர்கள் கற்றுக்கொடுத்தனர். மறைந்த மக்கள் விஞ்ஞானி தாமஸ் பிரகாசத்தின் அறிவியல் ஆய்வுகள் குறித்து பகிர்ந்து கொள்ளப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு புதுச்சேரி வன பாதுகாவலர் அருள் ராஜன் சான்றிதழ்களை வழங்கினார். விழாவில் 8 அறிவியல் செயல்பாட்டு அரங்கங்களும் , 30 கருத்தாளர்களும், 25 தன்னார்வலர்களும் மற்றும் பல்வேறு கிராமங்களில் இருந்து திரளான குழந்தைகளும் கலந்து கொண்டனர்.