districts

img

அசோக் லேலண்ட் கேண்டீன் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஊதியம் உயர்வு

சென்னை, நவ. 7- சென்னை மாநகராட்சி எண்ணூர் பகுதியில் அசோக் லேலண்ட் நிறுவனம் உள்ளது. இங்கு  கடந்த 25ஆண்டுகளுக்கு மேலாக  சுமார் 200 ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.  அந்த தொழிலாளர் களை மரியாதை குறைவாக நடத்துவது, 12 நேரம் வேலை வாங்குவது, பி.எப். இஎஸ்ஐ, போனஸ், குறைந்தபட்ச கூலி ஆகியவை முறையாக நடைமுறை படுத்தாத நிலையில் 2005ஆம் ஆண்டு தொழிலாளர்கள் சங்கம் அமைக்க முயற்சித்தார்கள். இதனால் சங்க நிர்வாகிகள் பழிவாங்கப்பட்ட சிலர் வேலை இழந்தனர். ஆனாலும் சிஐடியு வழிகாட்டுதலில் நிதானமாக விடாப்பிடி யாக தொடர்ந்து போராடி வந்தனர். அதையொட்டி 12 மணி நேர வேலை 8 மணி நேரமாக மாற்றி அமைக்கப்பட்டது. குறைந்தபட்ச ஊதியம், பிஎப், இஎஸ்ஐ, போனஸ் உறுதி செய்யப்பட்டது. 20 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் மட்டும் போதாது. கூடுதல் ஊதியம் வழங்க வேண்டும். இரவு பணியாற்றுபவர்களுக்கு இரவுப் பணி அலவன்ஸ், மாதந்தோறும் முடி வெட்டும் அலவன்ஸ் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது.

ஆனால் நிர்வாகம் கோரிக்கையை ஏற்க மறுத்தது. இதையடுத்து உணவு மறுத்து பணியாற்றும் போராட்டம் 8 நாட்கள் தொடர்ந்தது. அப்போதைய ஒப்பந்ததாரர் ஊதிய உயர்வு வழங்குவதாகக் கூறியதால் போராட்டம் திரும்ப பெறப்பட்டது. ஆனால் ஒப்பந்ததாரர் அதை நடைமுறைப்படுத்த வில்லை. இதனால் தொழிலாளர்கள் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.  இதற்கிடையே ஒப்பந்ததாரர் மாற்றப்பட்டு புதிய ஒப்பந்ததாரருடன் நடத்திய  பேச்சுவார்த்தையில் ஊதிய உயர்வு பிரச்சனை முடிவுக்கு வந்தது. குறைந்தபட்ச கூலியை விட மாதம் ரூ2,600 ஊதிய உயர்வு, தொழிலாளி ஓய்வு பெறும் போது கிராஜூவிட்டி, 3செட் சீருடை, 9 மாதத்திற்கு ஒரு பாதுகாப்பு காலணி (ஷூ) வழங்கப்படும் என்று பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இவை கடந்த. ஜூலை 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் 3 மாதத்திற்கான நிலுவைத்தொகை  வழங்கப்படும் என்று கூறப்பட்டது. பேச்சுவார்த்தையில் அசோக் லேலண்ட் கேண்டீன் ஒப்பந்ததாரர் சிஆர்சிஎல் எல்.எல்.பி. நிறுவனத்தின் சார்பில் டாக்டர் ஈஸ்வர ரெட்டி, கேண்டீன் பொறுப்பாளர், இயக்குநர் ஜெயநாராயணன், நிர்வாக மேலாளர் ராம்குமார், கிஷோர் குமார் (மேலாளர் மனிதவளம்), உதவி பொது மேலாளர் ஆரோக்கியசாமி, வேல்முருகன், சிஐடியு திருவொற்றியூர் பொதுத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் ஆர்.ஜெயராமன், பொதுச் செயலார் கே.ஆர்.முத்துசாமி. கேண்டீன்  தலைவர் சேகர், செயலாளர் சங்கர், துணைத் தலைவர்கள் ராஜூ, ஆறுமுகம், பொருளாளர் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.