புதுச்சேரி, ஏப்.13- மக்களவைத்தேர்தலை முன்னிட்டு நரிக்குறவர் சமூகத்தினருக்காக பிரத்யேக வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி, புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள நரிக்குறவர் காலனியில் வெள்ளியன்று (ஏப்.12) நடைபெற்றது. புதுச்சேரி மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அ.குலோத்துங்கன் நரிக்குறவர் சமூகத்தினரிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்போது அவர், வாக்காளர்களுக்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் மற்றும் பிற வசதிகள் பற்றி எடுத்துக்கூறி, அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்றும், தங்கள் சமூகத்தில் உள்ள மற்றவர்களையும் வாக்களிக்க ஊக்கப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார். இதில் உதவி மாவட்ட ஆட்சியர் யஷ்வந்த் மீனா, உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சியில் சுமார் 50க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பங்களைச் சார்ந்தவர்கள் ஆர்வமாகக் கலந்து கொண்டனர். முன்னதாக, வாக்களித்தல் பற்றி நரிக்குறவர்கள் சுலபமாக புரிந்து கொள்ள உதவும் வகையில், தேர்தல் பற்றிய வாக்காளர் விழிப்புணர்வு செய்திகள் டிஜிட்டல் திரையில் காணொலியாக காண்பிக்கப்பட்டது.