districts

img

வேலை தருவதாக கூறி ரூ 10 லட்சம் மோசடி: 3 பேர் கைது

அம்பத்தூர், அக். 27- அம்பத்தூர் பாடி சத்யா நகர் மூர்த்தி தெருவில் வசிப்பவர் கார்த்திக் (36). இவர் ஆவடி காவல் ஆணையர் கி.சங்கரிடம் புகார் அளித்தார். அந்த புகாரில், இணையதளத்தில் டெலிகிராம் ஆஃப் மூலம் ஒரு விளம்பரத்தைப் பார்த்தேன். அதில் பகுதி நேர வேலைவாய்ப்பு உள்ளது என்றும், அதிகளவில் சம்பாதிக்கலாம் என்றும் விளம்பரம் செய்யப்பட்டது. அதனை உண்மை என நம்பி எனது பான் நம்பர், ஆதார் கார்டு ஆகியவற்றை லிங்கில் பரிமாற்றம் செய்தேன். அதன் பின்னர் எனது வங்கி கணக்கில் இருந்து ரூ 10 லட்சம் எடுக்கப்பட்டது தெரிய வந்தது. பின்னர் விளம்பரம் செய்யப்பட்ட டெலிகிராம் ஆப் இணைய தளத்தில் இல்லை. எனவே, இந்த மோசடியில் ஈடுபட்டவர்களை கண்டு பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் கூறியிருந்தார். அதன்மீது உரிய நடவடிக்கை எடுக்க ஆணையர் கி.சங்கர் இணைய வழி குற்றப்பிரிவு ஆய்வாளர் மகாலட்சுமிக்கு உத்திரவிட்டார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சென்னை வளசரவாக்கம் காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்த விவேகானந்தன் (44), கடலூர் லால்பேட்டை கொத்தவால் தெருவைச் சேர்ந்த ஹலிகுல் ஜமால் (42), சென்னை நங்கநல்லூர் வி.வி. நகர் 9ஆவது தெருவைச் சேர்ந்த அஸ்கர் செரீப் (38) என்பது தெரிய வந்தது. இதையடுத்து 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.