திருப்பூர், செப்.9 – பன்னாட்டு நிறுவனங்களிடம் பஞ்சு இருப்பு எவ்வளவு உள்ளது என்ற விபரத்தை ஒன்றிய அரசு பெற்று உண்மை நிலையைத் தெரிவிக்க வேண்டும் என்று மத்திய ஜவுளி அமைச்சர் பியூஸ் கோயலுக்கு தென்னிந்திய பின்னலாடை உற்பத்தியாளர் சங்கம் (சைமா) தலைவர் ஏ.சி.ஈஸ்வரன் கடிதம் எழுதியுள்ளார். தென்னிந்திய பின்னலாடை உற்பத்தியாளர் சங்கம் (சைமா) தலைவர் ஏ.சி.ஈஸ்வரன் சனியன்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி கோவைக்கு வந்தபோது சைமா தலைவர் என்ற முறையில் நேரில் சந்தித்து பனியன் தொழிலில் உள்ள சிரமங்களைத் தெரிவித்தோம். பஞ்சு விலை தினசரி மாறுபடுவதால் நூல் விலையும் அடிக்கடி மாறிக் கொண்டி போகிறது. இதனால் கார்மெண்ட்ஸ், கைத்தறி மற்றும் விசைத்தறி போன்ற தொழில்கள் மிகவும் சிரமத்தில் தவித்துக் கொண்டிருக்கின்றன. மேலும் தொழிலாளர் வேலை வாய்ப்புகளையும் இழக்க வேண்டிய சூழ்நிலை நேரிட வாய்ப்புள்ளது. நமது நாட்டில் தேவையான பருத்தி உற்பத்தி செய்தும், நமக்கு பற்றாக்குறை ஏற்படுவதற்கு காரணம் பன்னாட்டு நிறுவனங்களின் செயல்பாடுகள்தான். பருத்தி சீசன் காலங்களில் 356 கிலோ கொண்ட ஒரு கேண்டி பஞ்சு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.55 ஆயிரம் என்ற குறைந்த விலையில் பன்னாட்டு நிறுவனங்கள் வாங்கி, பல லட்சம் பேல்களை இருப்பு வைத்துக் கொள்கிறார்கள். பருத்தி சீசன் முடிந்தவுடன் செயற்கையான பற்றாக்குறையை உருவாக்கி, 356 கிலோ கொண்ட ஒரு கேண்டி பஞ்சை ரூ.60 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள். எனவே மத்திய அரசு தலையிட்டு பன்னாட்டு நிறுவனங்களிடம் பஞ்சு இருப்பு குறித்த விபரங்களைப் பெற்றால்தான் உண்மை நிலை புரியும். மத்திய அரசு உடனடியாக இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, கைத்தறி, விசைத்தறி, பனியன் ஆயத்த ஆடைகள் உள்பட ஜவுளித் தொழில் அழிந்துவிடாமல் காப்பாற்ற வேண்டும் என்று சைமா தலைவர் ஏ.சி.ஈஸ்வரன் கேட்டுக் கொண்டிருக்கிறார்.