districts

img

குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல்

சேலம், மே 29- ஓமலூர் அருகே குடிநீர் கேட்டு பொது மக்கள் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே ஆர்.சி.செட்டிபட்டி கிராமத்தில் சுமார் 1500 குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதி மக்களுக்கு பாது கக்கபட்ட காவிரி கூட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதிக்கு இரண்டு மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள் மட்டுமே உள்ளது. அதனால், மக்களுக்கு முறையாக குடிநீர் விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஒரு மாதமாக குடிநீர் விநியோகிக்கப்படாததால் இப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். இதுகுறித்து தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இத னால் ஆவேசமடைந்த அப்பகுதி பெண்கள், காலிக் குடங்களுடன் சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தகவலறிந்து, போலீசார் போக்கு வரத்து சீர் செய்யும் பணியில் ஈடுபட்ட நிலையில், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் தரப்பில் மாதத்திற்கு ஒரு முறை மட்டும் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக குடிநீர் விநியோகம் முறையாக இல்லை. டேங் ஆபரேட்டர்கள் தனியாருக்கு குடிநீரை விற்பனை செய்கின்றனர். இங்குள்ள ஓட்டல், பள்ளிகளுக்கு அதிகளவில் குடிநீர் விநியோகிக்கின்றனர். அதனால், மக்களுக்கு குடிநீர் கிடைப்பதில்லை. இது குறித்து நாங்கள் கேள்வி கேட்டால், ஆபாசமாக திட்டுவதாக பெண்கள் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர்.  இதையடுத்து, பொதுமக்கள் புகார்கள் குறித்து ஆய்வு செய்யப்படும். மக்களுக்கு முறையாக குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த அதிகாரிகள், டேங் ஆபரேட்டர்கள் மீது நடவடிக்கை எடுத்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.