கோவை அருகே வீட்டில் வளர்க்கப்படும் கோழி இட்ட அதிசய முட்டை சற்று பெரியதாக இருப்பதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.
கோவை குரும்பபாளையம் விவேகானந்தா நகர் ஈ.பி.காலனியை சேர்ந்தவர் அபு (வயது 40). இவருடைய மனைவி சியாமளா (34). இவர்கள் தங்களது வீட்டில் சுமார் 50-க்கும் மேற்பட்ட கோழிகளை வளர்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் இவரது வீட்டில் உள்ள கோழி கடந்த சனியன்று முட்டையிட்டது. அந்த முட்டை சாதாரண முட்டையை காட்டிலும் பெரிய அளவில் இருப்பதைக் கண்டு அவர்கள் ஆச்சரியமடைந்தனர்.
கோழி முட்டை 8.1 இன்ச் உயரமும், 5.9 இன்ச் சுற்றளவும், 90 கிராம் எடை கொண்டதாகவும் இருந்தது. சமூக வலைத்தளங்களில் ஆராய்ந்தபோது, கின்னஸ் புத்தகத்தில் ஜெர்மனியின் பெர்லின் நகரத்தை சேர்ந்த ஒருவரது கோழியிட்ட முட்டை இடம்பெற்றிருந்தது. அந்த முட்டை 10 இன்ச் உயரமும், 5 இன்ச் சுற்றளவும், 132 கிராம் எடை கொண்டதாகவும் இருந்துள்ளது. அந்த முட்டையை விட சியாமளா வளர்த்த கோழியிட்ட முட்டை சுற்றளவில் இன்ச் அளவு கூடுதலாக இருந்ததால் அந்த முட்டையை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற வைக்க முயற்சி செய்து வருவதாக சியாமளா தெரிவித்தார். மேலும் இந்த முட்டையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பரிசளிக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.