கோவை, ஜன. 13 - தமிழக அரசின் கொரோனா தொற்று தடுப்பு நெறிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு கோவையில் 21 ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு வருடமும் கோவை செட்டிபாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். தற்போது கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று வெகுவாக பரவி வருகிற நிலையில், இப்போட்டி நடைபெறுமா என்கிற ஐயம் எழுந்து வந்தது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கறாராக பின்பற்றி இப்போட்டிகளை நடத்துவது என கோவை மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இதனையடுத்து போட்டி நடைபெறும் பகுதியை வியாழனன்று கோவை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் கூறுகையில்,
64 ஏக்கர் பரப்பளவில் நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 300 மாடு பிடி வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். காலை 8 மணி முதல் மாலை 5 வரை நடைபெறும். 500 முதல் 600 காளைகள் பங்கேற்க உள்ளது. மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. தொலைக்காட்சிகள், உள்ளூர் சேனல்களில் நேரிடையாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. மாடுபிடி வீரர்கள் இரு தவணை தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் காவல்துறையினர் ஈடுபட உள்ளனர் என தெரிவித்தார்.