ஒன்றிய அரசு நிறுவனங்களில் தமிழ் தெரிந்த அலுவலர்களை பணியமர்த்த வேண்டும் என சிஐடியு வினர் பி.எப் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம் என்பதால், ஏராளமான தொழில் நிறுவனங்கள் தொழிலார்களிடம் ஊதியத்தில் ஒரு பங்கு பணம், நிறுவனம் ஒரு பங்கு பணம் என பிஎப் அலுவலகத்தில் செலுத்தப்படுகிறது.
கோவை பாலசுந்தரம் சாலையில் வருங்கால வைப்பு நிதி (பிஎப்) அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் பெரும்பாலானவர்கள் இந்தி மற்றும் ஆங்கிலம் தெரிந்த வடநாட்டு ஊழியர்களே பணியில் உள்ளனர். இதனால் பல நேரங்களில் பிஎப் பணத்தை எடுப்பதற்கு அல்லது இதில் எழும் சந்தேகங்களை தெளிவு படுத்திக்கொள்ள தொழிலாளர்கள் பிஎப் அலுவலகத்திற்கு சென்றால் மொழி பிரச்சனையால் பெரிதும் அவதிப்படும், அலைகழிப்பிற்கும் உள்ளாகின்றனர்.
இந்நிலையில் இன்டோசெல் நிறுவனத்தில் உள்ள சுமார் 50 தொழிலாளர்கள் தங்களது பிஎப் பணத்தில் உள்ள குளருபடிகள் குறித்து தெளிவுபடுத்திட பிஎப் அலுவலகத்திற்கு பலமுறை சென்றும் மொழிப்பிரச்சனையால் அவதிப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து பிரச்சனை குறித்து கோவை மாவட்ட சிஐடியு சங்கத்திற்கு தெரிவித்தனர். அதனடிப்படையில் பிஎப் அலுவலகத்திற்கு சம்பந்தப்பட்ட பொருள் குறித்து விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளனர். மூன்று வார காலமாகியும் எந்தவித பதிலும் வரவில்லை. தொழிலாளர்கள் நேரில் சென்றால் மொழிப்பிரச்சனை. விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பினால் பதில் இல்லை என்கிற நிலையில் வியாழனன்று பிஎப் அலுவலகத்தை இன்டொசெல் தொழிலாளர்கள் சிஐடியு தலைமையில் முற்றுகையிட்டனர். இதில் தமிழ் மொழி தெரிந்த அதிகாரிகளை, அலுவலர்களை நியமிக்க வேண்டும். தொழிலாளர்களின் பணத்தில் பிஎப் நிறுவனம் இயங்குகிறது. ஆனால் தொழிலாளிகள் இந்த அலுவலகத்திற்கு வருவதற்குள் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளது. அதிகாரிகளை சந்திப்பது என்பது இயலாத காரியமாக இருக்கிறது. உடனடியாக இந்த குறைகளை களைய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதுகுறித்து சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், ஒன்றிய அரசு நிறுவனங்களான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், வங்கி, இரயில்வே போன்ற அலுவலகங்களில் ஹிந்தி தெரிந்தவர்களையே ஒன்றிய அரசு பணியில் நியமித்துள்ளது. இதனால் பொதுமக்கள், தொழிலாளர்கள் அந்தந்த அலுவலகங்களில் அலுவலர்களிடம் தொடர்பு கொண்டு சேவைகளை பெருவதற்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. எனவே மத்திய அரசு தமிழகத்தில் தமிழ் தெரிந்த அலுவலர்களை நியமிக்க வேண்டும். இந்த தொழிலாளர்களின் பணத்தில் இயங்குகிற இந்த பிஎப் அலுவலகத்தில் தமிழ் மொழி தெரிந்த அதிகாரிகளை நியமிக்க வேண்டும். இல்லையெனில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை சிஐடியு திரட்டி தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம் என்றார்.
இதனையடுத்து முற்றுகை ஈடுபட முயன்றவர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி மேலாளரை சந்திக்க ஏற்பாடு செய்ததையடுத்து முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர். இதில் சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் சங்க நிர்வாகிகள் மாரிமுத்து, கண்ணுசாமி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.