districts

மாவட்ட அளவிலான கலைத்திருவிழா

சேலம், அக்.27- வட்டார அளவிலான போட்டிகளில் முதல் இரண்டு இடங்களை பெற்ற மாணவ, மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொணரும் விதமாக அரசுப் பள்ளிகளில் பயிலும் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, இவ்வாண்டும் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கும் கலைத்திருவிழா போட்டிகள் பள்ளி, வட்டார அளவில் நடத்தப்பட்டன. இதில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 6 பிரிவுகளில் 33 இனங்களிலும், 9 மற்றும் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 9 பிரிவுகளில் 74 இனங்களிலும், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 9 பிரிவுகளில் 81 இனங்களிலும் என மொத்தம் 188 வகையான போட்டிகள் நடத்தப்பட்டன. பள்ளி அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் 1,50,791 மாணவர்கள் கலந்து கொண்டு, அதில் முதலிடம் பெற்ற 39,780 மாணவர்கள் வட்டார அளவிலான கலை திருவிழா போட்டிகளில் பங்கு பெற்றனர். தற்போது வட்டார அளவில் முதல் 2 இடங்கள் பெற்ற 11,177 மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள உள்ளனர். அதன்படி சேலம் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் வெள்ளியன்று துவங்கியது. புனித பால் மேல்நிலைப்பள்ளி, பாரதி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி, ஹோலி ஏஞ்சல் மெட்ரிக்பள்ளி, காமராஜர் நகரவை மகளிர் மேல்நிலைப்பள்ளி, சிறுமலர் தொடக்கப் பள்ளி, பத்மாவாணி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சக்தி கைலாஷ் கல்லூரி உள்ளிட்ட 8 இடங்களில் இப்போட்டிகள் நடைபெறுகின்றன. இப்போட்டிகள் சனியன்றும் (இன்று) நடைபெற உள்ளது.