தருமபுரி, செப்.21- தருமபுரி-மொரப்பூர் ரயில்பாதை அமைக்கும் பணிக்கு நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி அக்டோபரில் நிறைவுறும் என தென்னக ரயில்வே பொது மேலாளர் மல்லையா தெரிவித்துள்ளார். தருமபுரி மாவட்டம், மொரப்பூர் ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே பொது மேலாளர் மல்லையா ரயில்வே குழுவினருடன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் டி.என்.வி.எஸ்.செந்தில் குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். ஆய்வுக்குப் பின் செய்தியாளரிடம் பேசிய மல்லையா, மொரப்பூர் ரயில் நிலையத்தில் ரயில் பயணிகள் பாது காப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. நாடாளுமன்ற உறுப் பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், ரயில் பயணிகள் நல சங்கத்தின் கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். புதிய ரயில்கள் மற்றும் சில ரயில்களை இங்கு நிறுத்த கோரிக்கை வைத்துள்ளனர். இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். மொரப்பூர்- தருமபுரி ரயில்வே திட்டம் நிலம் கையகப் படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. மாநில அரசு நில அளவை பணிகளை மேற்கொண்டு வருகிறது. அக்டோபர் மாதத்தில் பணிகள் நிறைவடையும் என்றார்.