districts

img

மணல் திருட்டு: மாட்டுவண்டி பறிமுதல்

 நாமக்கல், அக்.25- குமாரபாளையம் காவிரி ஆற்றில் மாட்டு வண்டி மூலம் மணல் திருட்டில் ஈடுபட்டவர்களை, வருவாய்த்துறையினர் பிடித்து காவல் துறையில் ஒப்படைத்தனர். மேலும், மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர்.  நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் மற்றும் ஈரோடு மாவட்டம், பவானி பகுதியை இணைக்கும் வகையில் காவிரி ஆறு உள்ளது. இரு மாவட்டங்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக  இந்த காவிரி ஆறு உள்ளது. காவிரி ஆற்றில் எப்போதும் நீர் கரை புரண்டு ஓடும்.  இந்நிலையில் நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியில் மணல் திருட்டு அதிகரித்துள்ளது. தற்போது காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத்தால் மேட்டூர் அணை வறண்டு காணப்படுகிறது.  இதனால், காவிரியில் நீர்வரத்து குறைந்துள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, மணல் திருட்டு கும்பல் இரவு நேரங்களில் மாட்டு வண்டிகளிள் விடிய விடிய மணல் திருட்டு நடைபெறுகிறது. இது தொடர்பாக வந்த புகாரையடுத்து, வருவாய்த்துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், அதிகாரிகளுக்கு மீண்டும் மணல் அள்ளுவதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, பத்திரப்பதிவு அலுவலகம் அருகே காவிரி ஆற்றில் மாட்டு வண்டி மூலம்,  மணல் கடத்தி வந்த கும்பலை வருவாய்த்துறை அதிகாரிகள் மடக்கி பிடித்தனர். மேலும், இரண்டு வண்டிகளில் கடத்தி வரப்பட்ட ஆற்று மணலையும், வண்டிகளோடு பறிமுதல் செய்தனர். விசாரணையில் மணல் திருட்டில் ஈடுபட்டவர்கள் ஈரோடு மாவட்டம், பவானி பகுதியை சேர்ந்த சேகர் (31), மாது (58) மற்றும் கண்ணன் (18) என்பது தெரியவந்தது. இதனையடுத்து வருவாய்த்துறையினர், இவர்கள் மீது குமாரபாளையம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.  மேலும், மணல் திருட்டிற்கு பயன்படுத்திய மாட்டு வண்டிகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.