திருப்பூர், டிச.27- ஜிஎஸ்டி வரியை குறைத்து கட்டுமானப் பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என சிஐடியு கட்டுமான தொழிலாளர் சங்க மாநாடு தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. திருப்பூர் மாவட்டம், காங்கேயம் தாலுகா கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தின் 16ஆவது மாநாடு வெள்ளகோவில் தனியார் திருமண மண்டபத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. இம்மாநாட்டில் சங்கத்தின் உதவித் தலைவர் என்.வீராச் சாமி செங்கொடியை ஏற்றி வைத்தார். தலைவர் கே.ஆர்.கண்ணையன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் கதிர்வேல் வரவேற்றார். மாநாட்டைத் தொடக்கி வைத்து சிஐடியு ஈரோடு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்பிரமணியன் உரையாற்றினார். இதைத்தொடர்ந்து, காங்கேயம் தாலுகா தலைவராக கே.ஆர்.கண்ணையன், உதவித் தலைவர்களாக என்.வீராச்சாமி, குப்புசாமி, செயலாளராக எம்.கணேசன், உத விச் செயலாளராக கதிர்வேல், மாதம்மாள், பொருளாளர் பாரதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இம்மாநாட்டில் இருநூறுக்கும் மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக கட்டுமானத் தொழிலாளர் சம்மேளன மாநிலப் பொதுச் செயலாளர் டி.குமார் மாநாட்டு நிறைவுரை ஆற்றினார். இதில், கட்டுமானப் பொருட்கள் விலை குறைய ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும். ஓய்வூதியம் இதர பணப் பயன்களை உயர்த்தி வழங்க வேண்டும். தமிழக அரசு ஆன்லைன் பதிவுடன் நேரடி பதிவு செய்ய வேண்டும். இரு மாதங்களுக்கு ஒரு முறை நல வாரிய கூட்டத்தைக் கூட்ட வேண்டும். மாவட்ட கண்காணிப்புக் கூட்டத்தை மாதந் தோறும் மாவட்ட ஆட்சியர் கூட்ட வேண்டும் உள்ளிட்ட தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன.