கோவை, ஜூலை 8- காரமடை மார்க்கெட் பகுதியில் பேருந்து நிலையம் அமைப்பதற்கான முடிவை கைவிட வேண்டும் என வலியுறுத்தி மார்க்கெட் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்ட னர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை நகராட்சியில் தினசரி மார்க்கெட் மற்றும் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு காரமடை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் விளைந்த பொருட்களை எடுத்து வந்து விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், காரமடை நகராட்சி நிர்வாகம் சார்பில் பேருந்து நிலையத்தினை மேம்படுத்தும் நோக்கத்தில் தற்போது செயல்பட்டு வரும் பேருந்து நிலையத்தினை 6 ஏக்கர் பரப்பளவு கொண்ட மார்க்கெட் பகுதிக்கு இடமாற்றம் செய்ய முடிவு செய்து, அதற்கான தீர்மானமும் நிறைவேற்றபட்டுள்ளது. அதேசமயத்தில் மார்க்கெட்டை தற்போது பேருந்து நிலையமாக செயல்பட்டு வரும் இடத்திற்கு மாற்றவும் திட்டமிட்டுள்ளது. நகராட்சி நிர்வாகத்தின் இந்த முடிவுக்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நகராட்சி தனது முடிவை திரும்பப்பெற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால், நகராட்சி நிர்வாகம் அதற்கான முடிவை திரும்பப்பெறவில்லை. இந்நிலையில், இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்கெட் வியாபாரிகள் வெள்ளியன்று காலை கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மார்க்கெட்டில் உள்ள 200க்கும் மேற்பட்ட காய்கறி, பழக்கடைகள் மூடப்பட்டது.