இந்திய அரசின் ஜனநாயக விரோதச் செயல்களையும், மக்கள் விரோத அடக்குமுறைகளையும் எதிர்த்தும் கம்யூனிஸ்டுகளை கைது செய்து சிறையில் அடைப்பதை எதிர்த்தும், அவர்களை விடுதலை செய்யக் கோரியும் தொழிலாளர் போராட்டங்களை அடக்குவதை எதிர்த்தும் தீக்கதிர் உதயமானது. நீதியின் குரலாய், நியாயத்தின் சங்க நாதமாய் தீக்கதிர் பிறந்தது.
நமது நாட்டிலே நடந்து வருகிற அரசியல் அதன் திரைமறைவிலே திரண்டு வரும் வலதுசாரிகளின் வளர்ச்சி - கொள்ளை லாபக்காரர்களின் கும்மாளம் - விலைவாசியின் வீக்கம், வரிப்பளுவின் அழுத்தம், அவசரநிலை பிரகடனத்தை வைத்துள்ள ஆளும் வர்க்கத்தின் கொடுமை ஆகிய இத்தனை கதம்பக் கூத்துக்களையும் பொசுக்கித் தள்ளி, ஒரு புது யுகப் பாதைக்கு அழைத்துச் செல்லும் பணியில், ஒரு பத்திரிகையாக வந்துள்ள ஜீவசுடர்தான் தீக்கணை.
உண்மையிலேயே, நமது அன்னை பூமியாம் பாரதத்தை அமெரிக்க ஆங்கிலேய ராணுவ கிடங்கிலே தள்ள எண்ணுகின்ற முதலாளி வர்க்கத்தின் பாதுகாவலர்களுக்கும், வலதுசாரிகளை ஊக்குவிக்கும் மக்கள் விரோத கொள்கைக்கும் இந்த நாட்டை பிளவுபடுத்த நினைக்கும் எத்தர்களுக்கும் கட்சியை பிளவுபடுத்த நினைக்கும் பித்தர்களுக்கும் இது தீக்கணை மட்டுமல்ல, அவர்களது சரித்திரத்தை பஸ்பமாக்கும் காலாக்கினி என்றுகூட நாம் மார்தட்டி சொல்வோம்.
இனி தீக்கதிர் பரப்பப் போகும் கோடி சூரியப் பிரகாசத்தில் உழைக்கும் வர்க்கம் புது முறுக்கு கொள்ளும். ஏட்டின் செந்நாக்குகள் தெறித்து விழும் திசையெங்கும் அறிவுத் தீ தெறித்து விழும். திசையெங்கும் அறிவுத் தீ வானமுட்ட கிளம்பும். இந்த அக்னியின் தகிப்பிலே திரிபுவாதிகளும், வறட்டு தத்துவாதிகளும் அடங்கிப் போவர். மேலும், தீய்ந்து போன வலதுசாரி கூகைகளோ உள்ளம் பதைபதைத்து சாகும். தமிழகத்தின் மண்ணிலே புதிய சரீரம், புதிய ஜீவன் உற்பவிக்கும்.
தீக்கதிர் முதல் தலையங்கம்