districts

img

அகில இந்திய வேலை நிறுத்தம் மிகப் பெரிய வெற்றி பெறும் ;அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவிப்பு

அகில இந்திய வேலை நிறுத்தம் மிகப் பெரிய வெற்றி பெறும் தலைமைச் செயலாளர் அறிவிப்பை பொருட்படுத்த வேண்டியதில்லை  என அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது

மார்ச் 28, 29ல் அகில இந்திய பொது வேலை நிறுத்த போராட்டத்திற்கு மத்திய தொழிற்சங்கங்கள் அறைகூவல் விடுத்துள்ளது. இதனை கோவை மாவட்டத்தில் வெற்றிகரமாக நடைபெறும் என அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தில் பேட்டியளித்த தொழிற்சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள்  செய்தியாளர்களிடம் கூறுகையில்,

தொழிலாளி வர்க்கம் நான்கு தலைமுறையாய் போராடி பெற்ற சட்ட உரிமைகளை ஒன்றிய மோடி அரசு பறித்துவிட்டது.

தொழிலாளர் உரிமைகளை பறித்து பொதுத்துறைகளை தனியார்மயமாக்கி

கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாகவும், உழைப்பாளி மக்களுக்கு எதிராகவும் ஒன்றிய மோடி அரசு செயல்படுகிறது.

ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத, மக்கள் விரோத, விவசாயிகள் விரோத கொள்கைகளுக்கு எதிராகவும், சிறு, குறு, நடுத்தரத் தொழில்களை பாதுகாக்கவும், தொழில்துறைக்கு தேவையான மூலப் பொருட்களின் வரலாறு காணாத விலை உயர்வை குறைத்திட வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 28, 29 தேதிகளில் எல்பிஎப்,  ஐஎன்டியூசி, ஏஐடியூசி, எச்எம்எஸ, சிஐடியு, எம்எல்எப், ஏஐசிசிடியு, எஸ்டிடியு, எல்டியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் தலைமையில் நாடு முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டம் நடக்கிறது.

கோவை மாவட்டத்தில் இந்த போராட்டம் வெற்றிகரமாக நடைபெறும். ஆட்டோக்கள், பேருந்துகள், ரயில்கள் ஓடாது. தொழிற்சாலைகள், வங்கிகள், இன்சூரன்ஸ் உள்ளிட்ட பொதுத்துறை ஊழியர்கள் இப்போராட்டத்தில் முழுமையாக பங்கேற்கின்றனர். கடந்த வேலை நிறுத்த போராட்டத்தில் நாடு முழுவதும் 24 கோடி பேர் கலந்து கொண்டனர். இந்த முறை 40 கோடி பேர் கலந்து கொள்ள உள்ளனர்.

கோவை மாவட்டத்தில் வேலை நிறுத்த போராட்டத்தின் ஒரு பகுதியாக 28 ஆம் தேதி கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் மறியல் நடைபெறும்.  29ம் தேதி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

ஒன்றிய அரசின் மக்கள் விரோத, ஊழியர் விரோத நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்றிய, மாநில அரசு ஊழியர்கள் பெருமளவு வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

தமிழகத்தின் ஆளும் கட்சியாக உள்ள திமுக இப்போராட்டத்திற்கு முழு ஆதரவை தெரிவித்துள்ளது. ஆகவே தமிழக அரசின் தலைமை செயலாளர் அறிக்கையை பொருட்படுத்த வேண்டாம். அது வழக்கமான நடைமுறை தான். ஒன்றிய மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையின் காரணமாக நாட்டு மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர் ஆகவே இந்த வேலை நிறுத்த போராட்டம் மாபெரும் வெற்றியை பெறும் எத்தகைய மிரட்டல், அச்சுறுத்தலை தொழிலாளி வர்க்கம் எதிர்கொண்டு போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவோம் என்றார்.

இந்த சந்திப்பில்  எல்பிஎப் ரத்தினவேல், ஐஎன்டியுசி  பி.சண்முகம்,ஏஐடியுசி ஆறுமுகம், சி.தங்கவேல் , எச்.எம்.எஸ் டி.எஸ்.ராஜாமணி, சிஐடியு எஸ்.கிருஷ்ணமூர்த்தி, எம்எல்எப் சார்பில் மு.தியாகராசன், ஏஐசிசிடியு ஆர்.தாமோதரன்,  எஸ்.டி.டி.யூ  முகமது ரபீக், ஷாஜகான், எல்.டி.யூ.சி  மு.ஜெயப்பிரகாஷ் ஆகியோர் பங்கேற்றனர்.