காஞ்சிபுரம், மார்ச் 4- புதியதாக தரம் உயர்த்தப்பட்ட காஞ்சிபுரம் மாநகராட்சியின் முதல் பெண் மேயராக திமுக வேட்பாளர் யு.மகாலட்சுமிக்கு ஆணையர் நாராயணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயராக காங்கிரஸ் வேட்பாளர் குமரகுருநாதன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் முன்னிலையில் ஆணையர் சான்றிதழை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் மறியல் திருப்பெரும்புதூர் பேரூராட்சி மன்றத் தலைவராக திமுக வேட்பாளர் சாந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். பேரூராட்சியின் துணைத் தலைவராக 10 வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற இந்திராணி சுப்பிரமணி தேர்வு செய்யப்பட்டார். யாரும் துணை தலைவருக்கு போட்டியிடாததால் இந்திராணி துணை தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த பேரூராட்சியில் தலைவர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அதிகாரப்பூர்வ வேட்பாளராக செல்வமேரி அருள்ராஜ் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திமுகவினர் போட்டி வேட்பாளரை நிறுத்தி சாந்தியை வெற்றி பெற செய்துள்ளதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். திமுகவினரை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உத்திரமேரூர் பேரூராட்சி மன்ற தலைவராக திமுக வேட்பாளர் பி.சசிகுமார் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.