districts

தியேட்டருக்குள் அனுமதிக்க மறுப்பு நரிக் குறவர் மக்கள் போராட்டம்

கடலூர், ஜூன் 1- கடலூரில் திரையரங்கம் ஒன்றில் நரிக்குறவர் மக்களைக் கருடன் படம் பார்க்க அனுமதிக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எதிர் நீச்சல், காக்கிச் சட்டை, கொடி, பட்டாசு உள்ளிட்ட திரைப்படங்  களை இயக்கிய துரை செந்தில்குமார், வெற்றிமாறன் கதையை ‘கருடன்’ திரைப்படமாக இயக்கியிருக்கிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் சூரி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் சசிகுமார், சமுத்திரக்கனி, ஆர்.வி. உதயகுமார், வடிவுக்கரசி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வெள்ளிக்கிழமை (மே 31) வெளியானது. இந்நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே உள்ள லாடபுரம் எம்ஜிஆர் நகரில் வசித்து வரும் நரிக்குறவர் சமு தாயத்தை சேர்ந்த மக்கள், ‘கருடன்’ திரைப்படத்தை பார்க்க, சனிக்கிழமை (ஜூன் 1) காலை கடலூர் வந்துள்ளனர். இங்குள்ள ‘நியூ சினிமா’ திரையரங்கிற்குச் சென்று 23 டிக்கெட் கேட்டுள்ளனர். ஆனால், பணியில் இருந்த ஊழியர்கள் டிக்கெட் கொடுக்க மறுத்துள்ளனர்.  

இதனால், அவமானம் அடைந்த நரிக்குறவ மக்கள், அருகில்  உள்ள புது நகர் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் தெரிவித்தனர். போலீசாரோ, கோட்டாட்சியர் அலுவலகம் செல்லுமாறு அனுப்பி வைத்துள்ளனர். எப்படியும் படத்தை பார்த்தே தீர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த அந்த மக்கள், கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு சென்று மனு  கொடுக்க நீண்ட நேரம் காத்திருந்துள்ளனர்.  

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியர் பலராமன், நரிக்குறவர்கள் மற்றும் திரையரங்கு உரிமை யாளரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதைத் தொடர்ந்து, வட்டாட்சி யர் தனது காரிலேயே நரிக்குறவர் இன மக்களின் குழந்தைகள் சிலரை அழைத்து சென்று அனைவரையும் படம் பார்க்க ஏற்பாடு செய்துள்ளார்.