districts

img

திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்திற்கு தடை

திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்திற்கு விதித்த தடை உத்தரவை திரும்பப்பெற வலியுறுத்தி, கடைகளை அடைத்து பண்ணாரி சோதனைச்சாவடி அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதி வழியாக அமைந்துள்ளது திம்பம் மலைப்பாதை. இங்கு இரவு நேர வாகன போக்குவரத்தால், வாகனங்களில் அடிபட்டு வன விலங்குகள் உயிரிழந்து வந்தன. இதுதொடர்பாக வழக்கறிஞர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி (பொறுப்பு) முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி பாரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, கடந்த 2019 ஆம் ஆண்டு ஈரோடு ஆட்சியர், திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்திற்கு தடை  விதித்த உத்தரவை இன்று முதல் அமல்படுத்தவும், மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை வாகன போக்குவரத்தை தடை செய்யுமாறும் உத்தரவிட்டது.  

இந்நிலையில், உயர்நீதிமன்ற தீர்ப்பு தாளவாடி மலைப்பகுதி மக்களிடையே மேலும் கொதிப்பை ஏற்படுத்தது. தாளவாடி தாலுகாவில் உள்ள 10 ஊராட்சி களில் வசிக்கும் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தினந்தோறும் தங்களது அத்தியாவசியத் தேவைகளுக்காக சத்தியமங்கலம், கோபிசெட்டிபாளையம், ஈரோடு, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்து செல்கின்றனர். மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்திற்கு தடை விதிப்பதன் மூலம் தாளவாடி, ஆசனூர், மற்றும் கேர்மாளம் ஆகிய மலைப்பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் தனித்தீவாக மாறும் அபாயம் உள்ளது.

இந்நிலையில், வியாழனன்று காலை தாளவாடி நகரப்பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் அடைத்து வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதேபோல் தாளவாடி மற்றும் சத்தியமங்கலம் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பண்ணாரி சோதனைச்சாவடி அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பாதுகாப்பு பணியில் 200க்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.