court

img

இஸ்லாமியர் இட ஒதுக்கீட்டை உயர்த்தக் கோரிய வழக்கு தள்ளுபடி...

மதுரை:
தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை ஐந்து சதவீதமாக உயர்த்த கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.

மதுரையை சேர்ந்த ஜலாலுதீன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “1993-1994 அமைக்கப்பட்ட மண்டல கமிஷன் பரிந்துரை அடிப்படையில் பொருளாதாரம், மதம் மற்றும்மக்கள் தொகை அடிப்படையில் தமிழ்நாட்டில் பொதுப் பிரிவினருக்கு 31 சதவீதம், பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கு 26.5 சதவீதம், இஸ்லாமியர்களுக்கு 3.5சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீதம், தாழ்த்தப்பட்டோருக்கு 15 சதவீதம், மிகவும் தாழ்த்தப்பட்டோருக்கு 3 சதவீதம், பழங்குடியினருக்கு ஒரு சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

அதன் பிறகு தமிழ்நாட்டில் பொருளாதார ரீதியாகவும், மதரீதியாகவும் மற்றும் மக்கள்தொகை உயர்வு அடிப்படையில் இட ஒதுக்கீடு மாற்றம் ஏதும்வழங்கப்படவில்லை.3.5 சதவீத இட ஒதுக்கீட்டின் படி இஸ்லாமிய மக்கள் பொருளாதார ரீதியாகவும், அரசின் சலுகைகளையும் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.கேரளாவில் 12 சதவீதம் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இட ஒதுக்கீடும் ஆந்திரா மாநிலத்தில் 4 சதவீத இஸ்லாமிய மக்களுக்கும் இட ஒதுக்கீடு உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டிற்குப் பின்பு இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறவில்லை. தற்போதுள்ள நிலவரப்படி 50 சதவீதம் இஸ்லாமியர்கள் அதிகரித்து இருப்பதற்கான வாய்ப்புள்ளது. 2021-ஆம் ஆண்டு வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் இஸ்லாமியர்களுக்கும் 5 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி மனுச் செய்தும் நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை 1.5 சதவீதம் அதிகரித்து 5 சதவீதமாக வழங்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்” என மனுவில் கூறியிருந்தார்.இந்த மனு வெள்ளியன்று நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து நீதிமன்றம் எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

;